புகையிலை பொருட்களை பதுக்கி வைக்க போலீஸ் ஏட்டு உதவி?


புகையிலை பொருட்களை பதுக்கி வைக்க போலீஸ் ஏட்டு உதவி?
x
தினத்தந்தி 18 Sep 2018 9:45 PM GMT (Updated: 18 Sep 2018 10:53 PM GMT)

தேனி அருகே 480 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில், அவற்றை பதுக்கி வைத்த வீட்டை போலீஸ் ஏட்டு ஒருவர் வாடகைக்கு பிடித்துக் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேனி,

தேனி அருகே வடபுதுப்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சுகுணா தலைமையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சம்பந்தப்பட்ட வீட்டுக்கு சென்றனர். அந்த வீடு பூட்டி இருந்ததால் அல்லிநகரம் போலீசாரும் அங்கு வரவழைக்கப்பட்டனர். பின்னர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று சோதனை நடத்தினர்.

அந்த வீட்டில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள சுமார் 480 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளும், போலீசாரும் இணைந்து பறிமுதல் செய்து, அல்லிநகரம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் தரப்பிலும், உணவு பாதுகாப்புத்துறை தரப்பிலும் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், வீட்டின் உரிமையாளர் அதே ஊரைச் சேர்ந்த அழகர்சாமி என்பது தெரியவந்தது. அவர், தனது வீட்டை வேறு ஒரு நபருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். வீட்டை வாடகைக்கு பிடித்துக் கொடுப்பதற்கு போலீஸ் ஏட்டு ஒருவர் உதவியாக இருந்ததாக கூறப்பட்டது.

இதற்கிடையே போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள புகையிலை பொருட்களில் ஆய்வுக்காக மாதிரியை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று சேகரித்தனர்.

இந்த சம்பவம் குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை மற்றும் மேல் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சுகுணாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

வீட்டின் உரிமையாளர் அழகர்சாமியிடம் விசாரித்த போது, இந்த வீட்டை போலீஸ் ஏட்டு ஒருவர் மூலமாக தேனியில் உள்ள ஒரு பலசரக்கு கடை உரிமையாளருக்கு வாடகைக்கு கொடுத்துள்ளதாக தெரிவித்தார். பலசரக்கு கடை உரிமையாளர் தனது நண்பரான போலீஸ் ஏட்டு மூலம் வெள்ளைப்பூண்டு இருப்பு வைப்பதற்கு குடோன் தேவை என்று கூறி இந்த வீட்டை வாடகைக்கு பிடித்ததாக தெரியவந்துள்ளது.

ரகசிய தகவலின் பேரில் நடத்தப்பட்ட சோதனையில் புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்ட நிலையில், பலசரக்கு கடையில் வேலை பார்க்கும் தேனி அல்லிநகரத்தை சேர்ந்த பால்ராஜ் என்பவர் தாமாக முன்வந்து சரண் அடைந்துள்ளார். அவர், தனியாக தொழில் செய்ய ஆசைப்பட்டு உரிமையாளருக்கு தெரியாமல் புகையிலை பொருட் களை வாங்கி இருப்பு வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதை எழுத்துப்பூர்வமாகவும் அவர் எழுதி கொடுத்துள்ளார். கைப்பற்றப்பட்ட புகையிலை பொருட்களின் மாதிரி எடுத்து ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆய்வு முடிவு வந்தபிறகு கோர்ட்டில் வழக்கு தொடரப்படும். வீட்டை வாடகைக்கு எடுத்த பலசரக்கு கடை உரிமையாளர் மீது ஏற்கனவே இதுபோன்ற புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்தது தொடர்பாக வழக்குகள் உள்ளன. இதில் ஒரு வழக்கில் கோர்ட்டில் அபராதமும் செலுத்தி உள்ளார். இதனால், இதன் பின்னணியில் வேறு யாரும் உள்ளார்களா? என்றும் விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story