பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி  தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Sep 2018 9:45 PM GMT (Updated: 18 Sep 2018 11:56 PM GMT)

பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து கிரேனில் கார், மோட்டார்சைக்கிளை தொங்கவிட்டு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர், 


பெட்ரோல், டீசல் விலை தினமும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனை கண்டித்தும், குட்கா ஊழல் பிரச்சினையில் அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி.ராஜேந்திரன் ஆகியோர் பதவி விலகக்கோரியும் தி.மு.க.சார்பில் நேற்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் மாநகர செயலாளர் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., அவைத்தலைவர் முகமதுசகி ஆகியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மத்திய மாவட்ட செயலாளர் நந்தகுமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி அ.தி.மு.க. அரசை கண்டித்து பேசினார்.

ஆர்ப்பாட்டத்தின்போது பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி மேடையின் அருகே கார் மற்றும் மோட்டார் சைக்கிள் கிரேன் மூலம் தொங்கவிடப்பட்டிருந்தது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் “குட்கா ஊழலில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. ராஜேந்திரன் ஆகியோர் பதவி விலக வேண்டும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தையொட்டி திருவண்ணாமலை, விழுப்புரத்தில் இருந்து வேலூருக்கு வரும் வாகனங்கள் கோட்டை சுற்றுச்சாலை வழியாக திருப்பி விடப்பட்டன.

இதில், மத்திய மாவட்ட தி.மு.க. பிரமுகர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க.சார்பில் ராணிப்பேட்டை உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆர்.காந்தி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார்.

இதில் மாவட்ட தி.மு.க. அவைத்தலைவர் அ.அசோகன், மாவட்ட துணை செயலாளர்கள் ஏ.கே.சுந்தரமுர்த்தி, என்.ராஜ்குமார், வசந்தி ரவி, மாவட்ட பொருளாளர் மு.கண்ணையன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., ராணிப்பேட்டை நகர செயலாளர் பிஞ்சிபிரகாஷ் மற்றும் ஒன்றிய, நகர, பேரூராட்சி செயலாளர்கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மாவட்ட அணிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வேலூர் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் எஸ்.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் கே.பி.ஆர்.ஜோதிராஜன் வரவேற்றார். முன்னாள் மாவட்ட செயலாளர் தேவராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. சூரியகுமார், பி.எம்.முனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை மாவட்ட செயலாளர் ம.முத்தமிழ்செல்வி தொடங்கி வைத்தார்.

இதில் ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. மற்றும் ஒன்றிய செயலாளர்கள் கே.எஸ்.அன்பழகன், கு.ராஜமாணிக்கம், மாவட்ட மகளிரணி தலைவர் கவிதா தண்டபாணி, மாவட்ட பொருளாளர் அண்ணா.அருணகரி ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. முடிவில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வடிவேல் நன்றி கூறினார். 

Next Story