தண்டவாளத்தில் படுகாயங்களுடன் கிடந்த கொத்தனார் சாவு


தண்டவாளத்தில் படுகாயங்களுடன் கிடந்த கொத்தனார் சாவு
x
தினத்தந்தி 19 Sep 2018 9:51 PM GMT (Updated: 19 Sep 2018 9:51 PM GMT)

மார்த்தாண்டம் அருகே தண்டவாளத்தில் படுகாயங்களுடன் கிடந்த கொத்தனார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழித்துறை, 


மார்த்தாண்டம் அருகே பழைய கடை பகுதியில் உள்ள தண்டவாளத்தில் நேற்றுமுன்தினம் ஒருவர் படுகாயங்களுடன் கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த நாகர்கோவில் ரெயில்வே போலீசார் மற்றும் தக்கலை போலீசார் விரைந்து சென்று உயிருக்கு போராடிய அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே போலீசார் நடத்திய விசாரணையில், இறந்தவர் நட்டாலம் இடைவிளாகத்தை சேர்ந்த ஜெனில் (வயது 35) என்பது தெரியவந்தது. கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். அவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். கடந்த 17-ந் தேதி இரவு ஜெனிலின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. உடனே அவர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அதன் பிறகு அவரை பற்றி இரவு முழுவதும் தகவல் இல்லை. மறுநாள் படுகாயங்களுடன் தண்டவாளத்தில் அவர் கிடந்ததாக ஜெனிலின் குடும்பத்தினருக்கு தெரியவந்தது.

இதனால் ஜெனில் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும், ரெயிலில் அடிபட்டு இறந்திருக்க வாய்ப்பில்லை என்றும் அவருடைய குடும்பத்தினர் சந்தேகத்தை எழுப்பியுள்ளனர். மேலும் இதுதொடர்பாக போலீசிலும் புகார் கொடுத்துள்ளனர். அதன் பேரில் நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெனில் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story