இடியும் நிலையில் உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்பு கட்டிடத்தை சீரமைக்க கோரிக்கை


இடியும் நிலையில் உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்பு கட்டிடத்தை சீரமைக்க கோரிக்கை
x
தினத்தந்தி 20 Sep 2018 1:33 AM GMT (Updated: 20 Sep 2018 1:33 AM GMT)

கரூரில் இடியும் நிலையில் உள்ள வீட்டுவசதிவாரிய குடியிருப்பு கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என்று குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர், 

கரூர் தாந்தோன்றிமலை பகுதியில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இங்கு கரூர் கலெக்டர் அலுவலகம், கோர்ட்டு, தாலுகா அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வேலை பார்க்கும் அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் ஒரு குறிப்பிட்ட தொகையை மாத வாடகையாக செலுத்தி குடியிருந்து வருகின்றனர்.

இங்குள்ள அடுக்குமாடி கட்டிடங்கள் நீண்ட நாட்களாக பராமரிக்கப்படாததால் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து இடியும் நிலையில் உள்ளன. மேலும் கட்டிடத்தின் கம்பிகள் வெளியே தெரியும் படி இருக்கின்றன. இதனால் பாதுகாப்பு கருதி 30-க்கும் மேற்பட்டோர் வீடுகளை காலிசெய்துவிட்டனர். காலி செய்யப்பட்ட கட்டிடங்களில் பழைய மரசாமான்கள் உள்ளிட்டவைகளை போட்டு வைக்கப் பட்டுள்ளது.

மேலும் இந்த குடியிருப்பு வளாகத்தில் சிறுவர், சிறுமியர் உள்ளிட்டோர் விளையாடுவதற்காக அமைக்கபட்ட பூங்காவில் வேண்டாத செடிகள் முளைத்து பூங்கா பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இங்கிருந்து விஷ ஜந்துகள் அடிக்கடி வருவதால் குடியிருப்புவாசிகள் அச்சமடைந்து வருகின்றனர். எனவே தாந்தோன்றிமலையில் உள்ள வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும். அங்குள்ள பூங்காவை பராமரித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story