தந்தையை அரிவாளால் வெட்டிய வாலிபர்


தந்தையை அரிவாளால் வெட்டிய வாலிபர்
x
தினத்தந்தி 20 Sep 2018 10:00 PM GMT (Updated: 20 Sep 2018 10:04 PM GMT)

குன்னத்தூர் அருகே வேலைக்கு சென்று விட்டு தாமதமாக வந்ததை தட்டிக்கேட்டதால் ஆத்திரம் அடைந்த மகன் தந்தையை அரிவாளால் வெட்டினார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவது:-

குன்னத்தூர், 


குன்னத்தூர் அருகே உள்ள பாவுத்தம்பாளையம் கிராமம் காக்காகவுண்டன்புதூரை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 56). பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி செல்வி. இவர்களுடைய மகன் பிரகாஷ் (28). விசைத்தறி தொழிலாளி.
இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக செல்வி, பழனிசாமியை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதனால் பிரகாஷ் தனது தந்தையுடன் வசித்து வந்தார்.

தினமும் காலையில் வேலைக்கு செல்லும் பிரகாஷ் இரவில்தான் வீட்டிற்கு வருவார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேலைக்கு சென்ற பிரகாஷ், தாமதமாக வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது ஏன் தாமதமாக வருகிறாய்? என்று பிரகாசிடம், பழனிசாமி கேட்டுள்ளார். அப்போது தந்தை-மகனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த பிரச்சினை நேற்றும் தந்தை-மகனுக்கு இடையே ஏற்பட்டது. அப்போது ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பிரகாஷ், வீட்டில் இருந்துஅரிவாளை எடுத்து பழனிசாமியை வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த பழனிசாமியை அருகில் உள்ளவர்கள் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு விசாரணை செய்து வருகிறார்கள். மேலும் தலைமறைவாக உள்ள பிரகாசை தேடி வருகிறார்கள். 

Next Story