கருமாரி அம்மன் கோவிலில் திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிபதி ஆய்வு


கருமாரி அம்மன் கோவிலில் திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிபதி ஆய்வு
x
தினத்தந்தி 21 Sep 2018 10:45 PM GMT (Updated: 21 Sep 2018 6:46 PM GMT)

திருவேற்காடு கருமாரி அம்மன் கோவிலில் திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிபதி ஆய்வு நடத்தினார்.

பூந்தமல்லி,

மாநிலம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும், மாவட்ட நீதிபதிகள் நேரில் ஆய்வு செய்து, கோவிலில் அடிப்படை வசதிகள், கோவில் மற்றும் அதன் சொத்து பராமரிப்பு குறித்து ஆவணங்கள், கோவில் அலுவலக பணிகள் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு சென்னை ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி திருவேற்காட்டில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான தேவி கருமாரியம்மன் கோவில் மற்றும் வேதபுரீஸ்வரர் கோவில் ஆகிய 2 கோவில்களில் நேற்று திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிபதி செல்வநாயகம் ஆய்வு செய்தார்.

அப்போது கோவில் வளாகம் பராமரிப்பு, ஊழியர்கள் அடையாள அட்டை அணிந்துள்ள விவரம், கோவில் கட்டணச்சீட்டு விற்பனை விவரம், பக்தர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடம், குடிநீர், கழிப்பிட வசதி, தேர் நிறுத்துமிடம், அதன் பாதுகாப்பு, கோவில் பாதுகாப்பு அம்சம், கண்காணிப்பு கேமரா வசதி, பிரசாத கடைகள் என அனைத்தையும் ஆய்வு செய்தார். மேலும் கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறையில் அமர்ந்துகொண்டும் ஆய்வு செய்தார்.

பின்னர் வேதபுரீஸ்வரர் கோவிலில் காவலாளியை பணியமர்த்த வேண்டும். அங்கு கண்காணிப்பு கேமரா பொறுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டில் விரைவில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.

அப்போது அவருடன் கோவில் இணை கமிஷனர் வான்மதி, முன்னாள் அறங்காவலர் ரமேஷ் உள்ளிட்டோர் வந்தனர்.

Next Story