ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகள் அகற்றம் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு


ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகள் அகற்றம் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 22 Sep 2018 10:45 PM GMT (Updated: 22 Sep 2018 9:10 PM GMT)

நச்சலூரில் பாசன வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகள் அகற்றப்பட்டன. அப்போது கடையின் உரிமையாளர்கள், அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நச்சலூர்,

நச்சலூர் கட்டளை மேட்டு வாய்க்காலில் மதகுகள் அமைத்து அதில் இருந்து பிரிந்து நச்சலூர் கடைவீதி வழியாக பாசன வாய்க்கால் ஒன்று நச்சலூர் பெட்ரோல் பங்க் வரை செல்கிறது. இந்த வாய்க்கால் பாசனத்தால் 100-க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றது. இந்நிலையில் நச்சலூர் கடைவீதி பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கடைகள் பாசன வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டியுள்ளனர். மேலும் கடைகளில் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கழிவுகள், பேப்பர்கள் பாசன வாய்க்காலில் போடப்பட்டு சாக்கடையாக மாறி இருந்தது. இந்நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேற்று காலை பாசன வாய்க்காலை ஆக்கிரமிப்பு செய்த கடைகளை உதவி செயற்பொறியாளர் கொளஞ்சிநாதன், குளித்தலை வட்டாட்சியர் சுரேஷ்குமார், குளித்தலை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கடை உரிமையாளர்கள் சிலர் கடைகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் குளித்தலை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கடை உரிமையாளர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் நச்சலூர் கடைவீதி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story