அரசு அலுவலக பதிவேடுகளை தமிழில் பராமரிக்க வேண்டும் மக்கள் பாதை அமைப்பினர் மனு


அரசு அலுவலக பதிவேடுகளை தமிழில் பராமரிக்க வேண்டும் மக்கள் பாதை அமைப்பினர் மனு
x
தினத்தந்தி 24 Sep 2018 10:30 PM GMT (Updated: 24 Sep 2018 7:48 PM GMT)

அரசு அலுவலக பதிவேடுகளை தமிழில் பராமரிக்க வேண்டும் என மக்கள் குறைதீர் கூட்டத்தில் மக்கள் பாதை அமைப்பினர் மனு கொடுத்தனர்.

கரூர்,

கரூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக பிரதான கூட்டரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் குடிநீர் பிரச்சினை, வடிகால் வசதி பிரச்சினை உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகள் குறித்து 251 கோரிக்கை மனுக்களை நேரடியாக பெற்றார். பின்னர் இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு தெரியப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படுமா?

கூட்டத்தில், வெள்ளியணை அருகே ஜெகதாபி ஊராட்சிக்கு உட்பட்ட சுப்புராயரெட்டியூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து மனு கொடுத்தனர். அதில், கடந்த சில மாதங்களாக எங்கள் பகுதியிலுள்ள தெருகுழாய்களில் சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் 3 கிலோ மீட்டர் தூரம் சுற்றி சென்று சேங்கல் ஊராட்சியில் குடிநீர் பிடித்து வரவேண்டியுள்ளது. எனவே எங்கள் பகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கரூர் மாவட்ட செயலாளர் மூர்த்தி மற்றும் நிர்வாகிகள் கொடுத்த மனுவில், கரூர் பஸ் நிலைய பகுதியில் உள்ள மதுக்கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பால்ராஜ்புரம்-குளத்துபாளையம் வரை சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க வேண்டும். மண்மங்கலம் வட்டம் நன்னியூர் புதூரில் தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். மேலும் அங்கு பாதுகாப்பற்ற நிலையிலுள்ள நூலக கட்டிடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

கரூர் மாவட்ட மக்கள் பாதை அமைப்பு சார்பில் நிர்வாகிகள் அளித்த மனுவில், எங்கள் அமைப்பு சார்பில் தமிழ் கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது. அரசு பணியாளர்கள் தமிழில் கையெழுத்திட வேண்டும் என 1978-ல் போடப்பட்ட அரசாணையை மதிக்காத சூழல் நிலவுகிறது. எனவே மாவட்ட அரசு அலுவலகங்களில் பதியப்படும் பதிவேடுகள், கடிதங்கள், ஆணைகள், காலமுறை அறிக்கைகள், நாட்குறிப்புகள் பெயர்பலகைகள் உள்ளிட்டவற்றை தமிழிலேயே அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

மண்மங்கலம் தாலுகா நன்னியூரை சேர்ந்த ஆறுமுகம் கொடுத்த மனுவில், நான் எனது குடும்ப சூழல் காரணமாக சிவியாம்பாளையத்தை சேர்ந்த ஒருவரிடம் கடந்த 10 ஆண்டுக்கு முன்பு ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் கடன் வாங்கினேன். இந்த நிலையில் தொகை முழுவதும் செலுத்திய பின்னரும் கந்து வட்டி கேட்டு அந்த நபர் மிரட்டி வருகிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

கரூர் அருகே சின்னதாதம்பாளையம் கிராம மக்கள் திரண்டு வந்து கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் சிலர் சந்துக்கடை நடத்தி மது விற்று வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், மக்கள் குறை தீர்க்கும் தனித்துணை கலெக்டர் (பொறுப்பு) குமரேசன், மாவட்ட வழங்கல் அதிகாரி மல்லிகா மற்றும் அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story