மாநிலம் முழுவதும் விநாயகர் சிலை கரைப்பின் போது தண்ணீரில் மூழ்கி 19 பேர் பலி


மாநிலம் முழுவதும் விநாயகர் சிலை கரைப்பின் போது தண்ணீரில் மூழ்கி 19 பேர் பலி
x
தினத்தந்தி 24 Sep 2018 10:45 PM GMT (Updated: 24 Sep 2018 9:10 PM GMT)

மராட்டியத்தில் விநாயகர் சிலை கரைப்பின் போது தண்ணீரில் மூழ்கி 19 பேர் பலியானார்கள்.

மும்பை,

மராட்டியத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் பிரமாண்ட விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு 10 நாட்கள் வழிபாடு நடத்தப்பட்டது. நேற்று முன்தினம் சிலை கரைப்பு தினமான ஆனந்த சதுர்த்தி கொண்டாடப்பட்டது. இதையொட்டி விநாயகர் சிலைகள் நீர்நிலைகளுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டன. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் சிலை கரைப்பின் போது தண்ணீரில் மூழ்கி 18 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இதில் ராய்காட், ஜல்னா மற்றும் புனே மாவட்டங்களில் தலா 3 பேரும், சத்தாரா, பண்டாராவில் தலா 2 பேரும் பலியானார்கள். பிம்பிரி சிஞ்ச்வாட், புல்தானா, நாந்தெட், அகமத்நகர், நாசிக் ஆகிய இடங்களில் தலா ஒருவர் உயிரிழந்தனர்.

மும்பை காஞ்சூர்மார்க் பகுதியில் உள்ள குளத்தில் நடந்த விநாயகர் சிலை கரைப்பின் போது, பக்தர் ஒருவர் தண்ணீரில் மூழ்கி பலியானார்.

மும்பை கிர்காவ் கடற்கரையில் நேற்றும் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது, விநாயகர் சிலையுடன் கடலுக்குள் சென்ற படகு ஒரு பக்கமாக சாய்ந்ததில் அதில் இருந்த சிறுமி உள்பட 5 பேர் கடலுக்குள் விழுந்து தத்தளித்தனர். தீயணைப்பு படையினர் விரைந்து சென்று 5 பேரையும் பத்திரமாக மீட்டனர்.

உடனடியாக அவர்கள் சிகிச்சைக்காக நாயர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விசாரணையில், அவர்களது பெயர் கஜல் (வயது31), அவனி (5), அட்னன் (15), நிலேஷ் பேயர் (18) அனிதா (16) என்பது தெரியவந்தது.

Next Story