வீட்டில் புகுந்த பாம்பை பிடிக்க தீயணைப்பு வீரர்கள் வராததால் சாலையில் தூங்கிய குடும்பத்தினர்


வீட்டில் புகுந்த பாம்பை பிடிக்க தீயணைப்பு வீரர்கள் வராததால் சாலையில் தூங்கிய குடும்பத்தினர்
x
தினத்தந்தி 24 Sep 2018 10:26 PM GMT (Updated: 24 Sep 2018 10:26 PM GMT)

பனப்பாக்கத்தை அடுத்த நெமிலி கறியாகுடல் குட்டை காலனி பகுதி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் புண்ணியகோட்டி (வயது 49), தொழிலாளி.

பனப்பாக்கம்,

பனப்பாக்கத்தை அடுத்த நெமிலி கறியாகுடல் குட்டை காலனி பகுதி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் புண்ணியகோட்டி (வயது 49), தொழிலாளி. இவரது மனைவி கோமதி (41). இவர்களுக்கு ரேகா (16), விஜயலட்சுமி (14) என 2 மகள்கள் உள்ளனர். புண்ணியகோட்டியின் அண்ணன் பூபாலன் (55), மூளை வளர்ச்சி குன்றியவர். இவரது மனைவி ரஞ்சிதம் (45). இவர்களுக்கு ஆனந்தன் (28), சந்திரசேகர் (23) என 2 மகன்கள் உள்ளனர். அண்ணன் தம்பி இருவரும் ஒரே குடிசை வீட்டில் கூட்டு குடும்பமாக வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று இவர்களது வீட்டிற்குள் நல்ல பாம்பு ஒன்று புகுந்தது. இதை பார்த்த அவர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதுபற்றி தகவல் அறிந்து பாம்பு பிடிப்பவர்கள் வந்து நல்ல பாம்பை தேடினர். ஆனால் நல்ல பாம்பு வீட்டின் மேற்கூரையில் புகுந்தது. அதனை பிடிக்க முடியாமல் அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

பின்னர் அரக்கோணம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தீயணைப்பு வீரர்கள் அங்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அந்த குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு வெளியே வந்தனர். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவர்களுக்கு உணவு, தண்ணீர் கொடுத்து உதவினர். இரவு நேரம் ஆகிவிட்டதால் அவர்கள் சாலையிலேயே படுத்து தூங்கினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story