போலீஸ் துரத்திய போது மரத்தில் கார் மோதி பிரபல கொள்ளையன் பலி


போலீஸ் துரத்திய போது மரத்தில் கார் மோதி பிரபல கொள்ளையன் பலி
x
தினத்தந்தி 25 Sep 2018 11:15 PM GMT (Updated: 25 Sep 2018 6:47 PM GMT)

ஆவூர் அருகே போலீஸ் துரத்திய போது மரத்தில் கார் மோதி பிரபல கொள்ளையன் பலியானார்.

ஆவூர்,

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள ஒடுக்கூரை சேர்ந்தவர் சுப்பையா. இவருக்கு 5 மகன்கள். இதில் இரண்டாவது மகன் கோபாலகிருஷ்ணன் (வயது 32). 3-வது மகன் நேரு என்ற அழகர்சாமி(30). சென்னையில் பல நகைக்கடைகளில் கொள்ளையடித்தது. கீரனூர் அருகே உள்ள குளத்தூர் சிட்டி யூனியன் வங்கியில் 50 கிலோவிற்கும் மேற்பட்ட நகைகளை கொள்ளையடித்தது. திண்டுக்கல்லில் நடந்த ஒரு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது. இலுப்பூர் அருகே இருந்திரப்பட்டியில் கோவில் உண்டியலை உடைத்து திருடியது உள்ளிட்ட பல்வேறு கொள்ளை சம்பவங்களில் இவர்கள் 2 பேரும் தொடர்புடையவர்கள் ஆவர். இதனால் இவர்கள் மீது கீரனூர், சென்னை உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்த வழக்குகளில் கைது செய்யப்பட்ட அவர்கள், தற்போது ஜாமீன் பெற்று வெளியே இருக்கிறார்கள்.

இந்தநிலையில் நார்த்தாமலையில் உள்ள ஒரு கோவிலில் நேற்று முன்தினம் நடந்த பவுர்ணமி விழாவையொட்டி கீரனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். நேற்று அதிகாலை 2 மணியளவில் ஒடுக்கூர் கோபாலகிருஷ்ணன் மற்றும் அவருடைய அண்ணன் செல்வராஜ் ஆகியோர் அவர்களுக்கு சொந்தமான காரில் புதுக்கோட்டை சாலையில் இருந்து நார்த்தாமலைக்குள் நுழைந்தனர்.

அப்போது கோவில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் அந்த காரை தடுத்து நிறுத்தினார். ஆனால் அந்த கார் நிற்காமல் அதிவேகமாக கீழக்குறிச்சி பகுதியை நோக்கி சென்று விட்டது. இதனால் கோவிலில் பாதுகாப்பு பணியை முடித்துவிட்டு, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் கோபாலகிருஷ்ணனை பிடித்து விசாரணை செய்வதற்காக, ஒடுக்கூரில் உள்ள அவர்களது வீட்டிற்கு சென்றனர். அங்கு வீட்டின் ஒரு அறையில் அவர்களது தம்பி அழகர்சாமி தூங்கிக்கொண்டு இருந்தார். போலீசார் அவரை எழுப்பி உங்கள் அண்ணன்கள் இரண்டு பேரும் இங்கு வந்தார்களா? என்று விசாரணை செய்தனர். அப்போது போலீசை பார்த்ததும் வீட்டின் மற்றொரு பகுதியில் இருந்த கோபாலகிருஷ்ணன், செல்வராஜ் ஆகியோர் காரில் ஏறி வேகமாக தப்பிச்சென்றனர்.

இதையடுத்து போலீசார் தங்களது மோட்டார் சைக்கிள்களில் அவர்களை விரட்டி சென்றனர். ஆனால் கார் மின்னல் வேகத்தில் சென்று மறைந்தது. இதைத்தொடர்ந்து திரும்பி வந்த போலீசார் அழகர்சாமியை விசாரணைக்காக கீரனூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

இதற்கிடையே நேற்று காலை ஆவூர் அருகே இலுப்பூர்-திருச்சி சாலையில் புளியமரத்தில் கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிருக்கு போராடுவதாக அந்த வழியாக சென்றவர்கள் மாத்தூர் போலீசாருக்கும், 108 ஆம்புலன்சுக்கும் தகவல் கொடுத்தனர். ஆனால் ஆம்புலன்ஸ் வருவதற்குள் அந்த நபர் இறந்து விட்டார்.

இதைத்தொடர்ந்து மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தாமோதரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது காரில் இருந்த ஆதார் அட்டையை பார்த்ததில், காரை ஓட்டிவந்து விபத்தில் இறந்தவர் கீரனூர் போலீசார் துரத்திய கொள்ளையன் ஒடுக்கூர் கோபாலகிருஷ்ணன் என்று தெரியவந்தது.

அவருடன் காரில் வந்த அவரது அண்ணன் செல்வராஜ் தப்பி ஓடிவிட்டார். இதுபற்றி தகவல் அறிந்த கோபாலகிருஷ்ணனின் தந்தை சுப்பையா, தம்பி காமராஜ் மற்றும் அவர்களது உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

அவர்கள் கோபாலகிருஷ்ணனின் உடலை பார்த்து கதறி அழுதனர். அப்போது அங்கு வந்த கீரனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜை பார்த்து காமராஜ், என்னுடைய அண்ணனை விரட்டி பிடிக்கிறேன் என்று கொன்றுவிட்டாயே என தகாத வார்த்தைகளால் பேசினார். அவரை அந்த இடத்தில் இருந்து போலீசார் அப்புறப்படுத்தினார்கள்.

இதையடுத்து மாத்தூர் போலீசார் கோபாலகிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த போது தப்பி ஓடிய செல்வராஜை போலீசார் தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story