திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி டி.டி.வி. தினகரன் பேச்சு


திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி டி.டி.வி. தினகரன் பேச்சு
x
தினத்தந்தி 26 Sep 2018 11:15 PM GMT (Updated: 26 Sep 2018 8:37 PM GMT)

திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்கள் வெற்றி பெறுவது உறுதி என்று டி.டி.வி. தினகரன் பேசினார்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் 3 நாட்களாக மக்கள் சந்திப்பு பிரசார பயணம் மேற்கொண்டுள்ளார். இதையடுத்து நேற்று முன்தினம் நாகை புதிய பஸ் நிலையம் பகுதியில் டி.டி.வி. தினகரன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா மேற்கொண்ட முயற்சியால் தமிழகத்தில் தற்போது அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. முன்னதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பு வழங்கப்பட்டது. எங்களின் மூலம் பதவியில் உள்ள தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் 33 அமைச்சர்கள் தற்போது எங்களை பார்த்து யார்? என கேட்கின்றனர். தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோத அரசுக்கு முடிவு கட்ட வேண்டும். மத்தியில் ஆளும் பா.ஜ.க.வின் கிளை அரசாங்கம் தான் தமிழகத்தில் நடைபெறுகிறது.

தமிழக மக்களின் நியாயம், தர்மத்தின் பக்கமே உள்ளனர். ஆர்.கே. நகர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட என்னை தோற்கடிக்க அ.தி.மு.க.வினர் ரூ.180 கோடி செலவு செய்துள்ளனர். அமைச்சர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்தனர். தர்மமும், நியாயமும் எங்கள் பக்கம் இருந்ததால் சுயேச்சை வேட்பாளரான நான் வெற்றி பெற்றேன். தமிழக அரசியல் வரலாற்றில் சுயேச்சை வேட்பாளராக வெற்றி பெறுவது இதுவே முதல் முறை. மக்களும், இளைஞர்களும் மாற்றத்தை விரும்புவதால் ஆர்.கே. நகர் வெற்றியை தொடர்ந்து டிசம்பர் மாதம் நடைபெற உள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் அ.ம.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெறுவது உறுதி.

மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. நாகை துறைமுகம் மேம்படுத்தப்பட வேண்டும். மீன்பிடித்துறை முகம் அமைக்கப்பட வேண்டும். அரசு மருத்துவக்கல்லூரி அமைக்க வேண்டும். நாகை பகுதி மக்களின் கோரிக்கைகளை அ.ம.மு.க., ஆட்சியில் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக நாகை மாவட்டம் திருக்குவளை, கீழ்வேளூர், வலிவலம், சிக்கல், நாகூர், திட்டச்சேரி, திருமருகல் பகுதிகளில் டி.டி.வி. தினகரன் மக்கள் சந்திப்பு பிரசாரம் பயணம் மேற்கொண்டார். இதில் கட்சியின் நாகை தெற்கு மாவட்ட செயலாளர் சந்திரமோகன், முன்னாள் நகர மன்ற தலைவர் மஞ்சுளா சந்திரமோகன், நகர செயலாளர் லோகநாதன், மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் கிங்ஸ்லி ஜெரால்டு, மாவட்ட இணை செயலாளர் ரவிச்சந்திரன், ரவி மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

Next Story