அ.தி.மு.க. ஆட்சி மக்கள் விரைவில் தூக்கி எறிவார்கள் டி.டி.வி. தினகரன் பேச்சு


அ.தி.மு.க. ஆட்சி மக்கள் விரைவில் தூக்கி எறிவார்கள் டி.டி.வி. தினகரன் பேச்சு
x
தினத்தந்தி 27 Sep 2018 11:15 PM GMT (Updated: 27 Sep 2018 4:24 PM GMT)

அ.தி.மு.க. ஆட்சியை மக்கள் விரைவில் தூக்கி எறிவார்கள் என்று டி.டி.வி. தினகரன் கூறினார்.

முத்துப்பேட்டை,

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டைக்கு நேற்றுமுன்தினம் மக்கள் சந்திப்பு பயணமாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வந்தார். பழைய பஸ் நிலையத்தில் அவர் பேசியதாவது:–

இரவு 12 மணியானாலும் அப்படியே கலையாமல் என்னை எதிர்ப்பார்த்து காத்திருக்கீர்கள் என்றால் தமிழகத்தில் நடைபெற்று கொண்டிருகிற மக்கள் விரோத ஆட்சியை விரட்டி அடிக்க வேண்டும் என்பதற்காகவும், தமிழகத்தில் வருங்காலத்தில் அ.ம.மு.க. ஆட்சி மலர வேண்டும் என்று தாங்கள் எண்ணுவதும் நன்றாக தெரிகிறது.

இன்று ஆட்சியில் இருக்கும் அனைவரும் தங்களது குடும்பத்தில் உள்ளவர்களுக்காகதான் ஆட்சியை நடத்துகின்றனர். தமிழக முதல்–அமைச்சராக இருக்க கூடியவர் கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர். அங்குள்ளவர்கள் அழகான தமிழில் பேசக்கூடியவர். அனால் இந்த பழனிசாமி காட்டுமிராண்டிதனமாக பேசக்கூடியவராக உள்ளார். இவர்கள் என்னை பார்த்து தினகரன் யார்? என்று கேக்குகிறார்கள். இவர்களுக்கு காட்டில் உள்ளவர்களைத்தான் தெரியும்போல.

ஏன். இந்த பகுதி அமைச்சர் ஆம்.. சோத்திரியம் காமராஜ் (உணவுத்துறை அமைச்சர் காமராஜ்) எங்க வீட்டு விஷேசங்களில் சம்பர் வாளி தூக்கி சப்ளை செய்ய கூடியவர். இவரும் என்னை பார்த்து பார்த்து யார் தினகரன் என்கிறார் வேடிக்கையாக உள்ளது.

ஆர்கே.நகர் தொகுதியில் நான் முதன் முதலில் பிரசாரம் மேற்கொண்டபோது எனது பிரசார ஆட்டோவில் தொத்திக்கொண்டு வந்தவர்கள்தான் இந்த பழனிசாமி மற்றும் அமைச்சர்கள். இவர்கள் என்னை பார்த்து கேக்குன்றனர் யார்? இந்த தினகரன் என்று. நான் யாருன்னு இந்த மக்களுக்கு தெரியும், உங்களையும் யாருன்னு இந்த மக்களுக்கு தெரியும். அதனால் இந்த மக்கள் விரோத ஆட்சியை தூக்கி எரியும் காலம் வந்துக்கொண்டு இருகின்றது. இன்றைக்கு முத்துப்பேட்டை மக்களின் நீண்டநாள் கோரிக்கையான கோரையாற்றில் முகத்துவாரம் தூர்வார வேண்டும். மீனவர்கள் வசதிக்கு ஆசாத்நகரின் மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும். முத்துப்பேட்டை மக்களுக்கு கொள்ளிடம் கூட்டுகுடிநீர் வசதி மட்டுமல்லாது மற்றொரு திட்டத்தின்கீழ் குடிநீர் வழங்குதல், முத்துப்பேட்டை ரெயில் நிலையத்தை தரம் உயர்த்தி செயல்படுத்துதல், அறிவிக்கப்பட்ட முத்துப்பேட்டையை தனி தாலுக்காவை நடைமுறை படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை சாம்பார் வாளிகிட்ட அதாவது நமது சோத்திரியம் காமராஜிடம் சொல்லி பிரோஜனம் இல்லை அதனால் அமமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த முத்துப்பேட்டை மக்களின் கோரிக்கைகள் அனைத்து நிறைவேற்றிதரப்படும் அந்த வாய்ப்பை தாங்கள் தருவீர்கள் என்ற நம்பிக்கை என்னிடம் உள்ளது என்றார்.

முன்னதாக திருவாரூர் மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவருடன் மாநில பொருளாளர் ரெங்கசாமி, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஜெகன், நகர செயலாளர் லக்கிநாசர், ஒன்றிய துணைச்செயலாளர் மணிகண்டன், நகர துணைச்செயலாளர்கள் ரமேஷ், சித்திக், நகர இணைச்செயலாளர் சுல்தான் இபுராகீம், மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு இணைச்செயலாளர் இளவரசன், மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு மகளீர் அணி செயலாளர் விமலா ரமேஷ் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story