வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி கல்லூரி மாணவர் சிறையில் அடைப்பு


வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி கல்லூரி மாணவர் சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 27 Sep 2018 10:30 PM GMT (Updated: 27 Sep 2018 6:52 PM GMT)

சூலூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தனியார் கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சூலூர்,

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த பட்டணம்புதூரை சேர்ந்தவர் அன்பரசு. இவருடைய மனைவி மாரியம்மாள். இவர் ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களது மகன் விமல் ஆனந்த் (வயது 19). இவர் சூலூர் அருகே உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

நேற்று மதியம் விமல் ஆனந்த் கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அங்கு தனியாக இருந்த பெண்ணிடம் உங்கள் வீட்டிற்கு செட்-ஆப் பாக்ஸ் மாட்ட வந்திருப்பதாக கூறியுள்ளார். அதற்கு அந்த பெண் எங்கள் வீட்டில் டி.வி. இல்லை என்று கூறியுள்ளார்.

உடனே அந்த பெண்ணை கல்லூரி மாணவர் விமல்ஆனந்த் வீட்டிற்குள் தள்ளி கதவை அடைத்துள்ளார். பின்னர் அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். உடனே அந்த பெண் சத்தம் போட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர், அந்த பெண்ணின் கழுத்தை பிடித்து நெரித்து தாக்கியுள்ளார்.

இதனால் அந்த பெண் வலியால் துடிதுடித்து அலறினார். உடனே பயந்து போன விமல் ஆனந்த் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்ப முயன்றுள்ளார். இந்த நிலையில் அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியை சேர்ந்தவர்கள் அங்கு விரைந்து வந்தனர்.

அவர்கள் துரத்தி சென்று விமல் ஆனந்தை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை சரமாரியாக தாக்கி சூலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.இது குறித்து விசாரித்த சூலூர் இன்ஸ்பெக்டர் தங்கராஜ், விமல் ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்தார். பின்னர் அவருக்கு சூலூர் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்தனர். இதையடுத்து அவரை சூலூர் குற்றவியல் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

தனியாக இருந்த பெண்ணிடம் கல்லூரி மாணவர் தவறாக நடக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இந்த சம்பவம் குறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டவையாகும்.

Next Story