சுற்றுலா தலங்களை தூய்மையாக பராமரிக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்: கலெக்டர் கணேஷ் பேச்சு


சுற்றுலா தலங்களை தூய்மையாக பராமரிக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்: கலெக்டர் கணேஷ் பேச்சு
x
தினத்தந்தி 30 Sep 2018 1:50 AM GMT (Updated: 30 Sep 2018 1:50 AM GMT)

சுற்றுலா தலங்களை தூய்மையாக பராமரிக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என கலெக்டர் கணேஷ் கூறினார்.

புதுக்கோட்டை, 

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சுற்றுலாத்துறையின் சார்பில் தூய்மை இந்தியா இயக்க திட்டத்தின் கீழ் தூய்மை சேவை குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி, தூய்மை பணிகளை தொடங்கி வைத்து, அதற்கான உபகரணங்களை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், தமிழக முதல்-அமைச்சர் சுற்றுலாத்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களை மேம்படுத்தும் வகையில் பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தியதன் பயனாக இந்தியாவில் சுற்றுலா பயணிகளை அதிகளவில் ஈர்்ப்பதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

இத்தகைய சிறப்புமிக்க சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில், அனைத்து சுற்றுலா தலங்களும் தொடர்ந்து தூய்மைப்படுத்தப்பட்டு வருகிறது. சுற்றுலா தலங்களில் தூய்மையின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் புதுக்கோட்டை மன்னர் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் சார்பில் தூய்மைப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் சித்தன்னவாசல், குடுமியான்மலை, நார்த்தாமலை, ஆவுடையார்கோவில், குன்றாண்டார்கோவில், கொடும்பாளூர், திருக்கோகர்ணம், திருமயம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புகழ் பெற்ற சுற்றுலா தலங்கள் உள்ளன. சுற்றுலா தலங்களில் பயணிகள் வருகையை அதிகரிக்கும் வகையில் அடிப்படை வசதிகள் மேம்பாடு மற்றும் தூய்மையாக பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சுற்றுலா தலங்களுக்கு வரும் பொதுமக்கள் இதன் மூலம் உரிய விழிப்புணர்வு பெற்று சுற்றுலா தலங்களில் தேவையற்ற குப்பைகள் போடுவதை தவிர்த்து தூய்மையாக பராமரிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பல்வேறு தூய்மை பணிகளை மேற்கொண்டனர். இதில் மாவட்ட சுற்றுலா அதிகாரி இளங்கோவன், மன்னர் கல்லூரி பேராசிரியர் வேலு, நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story