கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் கொலை: ரியல் எஸ்டேட் அதிபர் கைது


கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் கொலை: ரியல் எஸ்டேட் அதிபர் கைது
x
தினத்தந்தி 4 Oct 2018 9:45 PM GMT (Updated: 4 Oct 2018 5:40 PM GMT)

திசையன்விளை அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ரியல் எஸ்டேட் அதிபர் கைது செய்யப்பட்டார்.

திசையன்விளை, 

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள அப்புவிளையை சேர்ந்த கணபதி பாண்டியன் மகன் சந்தோஷ் ராஜா (வயது 32). இவர் திருப்பூரில் உள்ள ஒரு நண்பருடன் சேர்ந்து குளிர்பான ஏஜெண்டு எடுத்து தொழில் செய்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. இதனால் இவருடைய மனைவி கவிதா சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டார்.

இந்த நிலையில் சந்தோஷ்ராஜாவுக்கு ஆறுமுகநேரியை சேர்ந்த முருகன் மகன் ராதாகிருஷ்ணனின் ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் வேலை பார்த்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. ராதாகிருஷ்ணன் பல்வேறு இடங்களில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகவில்லை.

இவர் அடிக்கடி வெளியூர் சென்று விடுவதால், ஆறுமுகநேரியில் இருந்த அலுவலகத்தை அந்த பெண் கவனித்து வந்துள்ளார். இந்த அலுவலகத்திற்கு சந்தோஷ்ராஜா அடிக்கடி சென்று அந்த பெண்ணுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். அதுநாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதை அறிந்த ராதாகிருஷ்ணன் இருவரையும் கண்டித்துள்ளார். ஆனாலும், 2 பேரும் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தோஷ்ராஜாவை கும்பல் ஒன்று காரில் கடத்தி சென்று திசையன்விளை அருகே கொலை செய்தது.

இந்த கொலை சம்பவம் குறித்து திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சாந்திசெல்வி வழக்குப்பதிவு செய்து, ஆறுமுகநேரியை சேர்ந்த சிவராமன், தூத்துக்குடியை சேர்ந்த விக்னேஷ், சங்கரமூர்த்தி, பூவேஸ், பாலா ஆகிய 5 பேரை கைது செய்தார். இவர்களிடம் நடத்திய விசாரணையில், தாங்கள் கூலிப்படையை சேர்ந்தவர்கள் என்றும், கள்ளக்காதல் விவகாரத்தில் ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில் சந்தோஷ்ராஜாவை கடத்தி கொலை செய்ததாக தெரிவித்தனர். இதை தொடர்ந்து ராதாகிருஷ்ணனை நேற்று திசையன்விளை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த கொலை வழக்கில் கூலிப்படையை சேர்ந்த சிலரை போலீசார் தேடி வருகின்றனர். 

Next Story