பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி 4,490 அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு


பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி 4,490 அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு
x
தினத்தந்தி 4 Oct 2018 11:00 PM GMT (Updated: 4 Oct 2018 7:28 PM GMT)

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி தஞ்சை மாவட்டத்தில் 4 ஆயிரத்து 490 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தஞ்சையில் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். 21 மாத சம்பள நிலுவைத்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் ஆசிரியர்கள்- அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு (ஜாக்டோ- ஜியோ) போராட்டம் நடத்தி வருகிறது.

அதன்படி நவம்பர் 27-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதையொட்டி 1 நாள் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி தஞ்சை மாவட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் (ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு) நேற்று தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்கள் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் (ஜாக்டோ) இளையராஜா தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் (ஜியோ) ரெங்கசாமி, அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியேர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் (ஜாக்டோ) கிட்டு நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது மழை பெய்து கொண்டே இருந்தது. இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது, குடையை பிடித்தவாறு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் 15 ஆயிரத்து 852 அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் 1,905 பேர் நேற்று தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது 12 சதவீதம் ஆகும். இதே போல் ஆசிரியர்கள் 10 ஆயிரத்து 617 பேர் பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் 2 ஆயிரத்து 585 பேர் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது 24 சதவீதம் ஆகும். தஞ்சை மாவட்டத்தில் 4 ஆயிரத்து 490 பேர் தற்செயல் விடுப்பு எடுத்தனர். மொத்தம் 8 இடங்களில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Next Story