அரக்கோணத்தில் டீக்கடைக்குள் கார் புகுந்தது; பெண் பலி-5 பேர் படுகாயம்


அரக்கோணத்தில் டீக்கடைக்குள் கார் புகுந்தது; பெண் பலி-5 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 5 Oct 2018 12:00 AM GMT (Updated: 4 Oct 2018 9:03 PM GMT)

அரக்கோணத்தில் டீக்கடைக்குள் கார் புகுந்த விபத்தில் பெண் பரிதாபமாக இறந்தார். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

அரக்கோணம்,

காஞ்சீபுரம் மாவட்டம், வண்டலூர் அருகே மன்னிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசலு (வயது 48). இவர் உறவினர்களுடன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அரக்கோணம்- சோளிங்கர் சாலை, நேதாஜி நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தனர்.

இதையடுத்து நேற்று சீனிவாசலு, உறவினர்களுடன் காரில் திருத்தணி கோவிலுக்கு சாமி கும்பிட சென்று கொண்டு இருந்தார். காரை சீனிவாசலு ஓட்டி சென்றார். அரக்கோணத்தில் திருத்தணி சாலை, மேட்டுத்தெரு அருகே கார் சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த மின்கம்பத்தை இடித்து கொண்டு டீக்கடைக்குள் புகுந்தது.

இதில் டீ குடித்து கொண்டு இருந்த வேடல், காந்தி நகரை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மனைவி ராணி (35) என்பவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

மேலும் டீக்கடை அருகே நின்று கொண்டிருந்த சிறுணமல்லியை சேர்ந்த சந்திரன் (60), அரக்கோணம், சுவால்பேட்டையை சேர்ந்த ஜீவரத்தினம் (45), ரெண்டாடியை சேர்ந்த ராஜவேலு (47), கீழாந்தூரை சேர்ந்த சரவணன் (38), மங்கம்மாபேட்டையை சேர்ந்த சேகர் (56) ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர். காரில் இருந்தவர்கள் சிறுகாயங்களுடன் தப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அரக்கோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கணேஷ்பாபு, சுரேஷ்பாபு ஆகியோர் சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

படுகாயம் அடைந்தவர்களில் சந்திரன், ஜீவரத்தினம், சேகர் ஆகியோர் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் சீனிவாசலுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார் மோதி சேதமடைந்த மின்கம்பத்தை மின்வாரிய ஊழியர்கள் சரிசெய்தனர். விபத்து காரணமாக அரக்கோணம்- திருத்தணி சாலையில் 15 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர்.

இந்த சம்பவம் காரணமாக அரக்கோணம் அரசு மருத்துவமனை முன்பு ஏராளமானவர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story