தஞ்சையில், பல்பொருள் அங்காடி பூட்டை உடைத்து பணம்-மளிகைப்பொருட்கள் திருட்டு


தஞ்சையில், பல்பொருள் அங்காடி பூட்டை உடைத்து பணம்-மளிகைப்பொருட்கள் திருட்டு
x
தினத்தந்தி 5 Oct 2018 10:00 PM GMT (Updated: 5 Oct 2018 8:37 PM GMT)

தஞ்சையில், பல்பொருள் அங்காடியின் பூட்டை உடைத்து பணம்-மளிகைப்பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தஞ்சாவூர்,

தஞ்சை கீழவண்டிக்காரத்தெருவை சேர்ந்தவர் பீட்டர் ஜோசப். இவர் தஞ்சை-நாகை சாலையில் பல்பொருள் அங்காடி நடத்தி வருகிறார். இதில் மளிகைப்பொருட்கள், வீட்டு உபயோகப்பொருட்கள் மற்றும் பரிசுப்பொருட்கள் உள்ளிட்டவை விற்கப்படுகின்றன. இந்த அங்காடியை பீட்டர் ஜோசப் அவருடைய மகன் ஜான்சன் ஆகியோர் நிர்வகித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு 11½ மணி அளவில் ஜான்சன் அங்காடியை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.

நேற்று காலை 6½ மணி அளவில் ஜான்சன் வழக்கம்போல் அங்காடியை திறக்க வந்துள்ளார். அப்போது அவர், அங்காடியின் 2 ஷட்டர் கதவுகளில் பூட்டப்பட்டிருந்த 4 பூட்டுகள் காணாமல் போயிருந்தது கண்டு திடுக்கிட்டார். மேலும், அதன் தாழ்பாள்கள் ‘கியாஸ் கட்டர்’ கொண்டு அறுக்கப்பட்டிருந்தது. கடையின் அருகில் உள்ள புதரில் பூட்டுகள் தூக்கி வீசப்பட்டிருந்தன. அங்காடியின் முன்பக்கம் உள்ள கேமராக்கள் திசைதிருப்பி வைக்கப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர், அங்காடியின் வாசலில் உள்ள ஷட்டரை திறக்க முயன்றார். ஆனால் திறக்க முடியவில்லை. இதையடுத்து கண்ணாடியால் அடைக்கப்பட்டிருந்த பகுதியில் உள்ள ஷட்டரை திறந்து பார்த்தபோது ஒரு ஆள் நுழையும் அளவுக்கு கீழ்பகுதியில் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து வாசலில் உள்ள ஷட்டர் கதவை திறந்து அங்காடிக்குள் சென்று பார்த்தபோது உள்ளே இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன. இதில் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பருப்பு, மிளகாய் உள்ளிட்ட மளிகைப்பொருட்கள் திருடப்பட்டிருந்தன. மேலும், கடையின் 2 மேஜை டிராயர்களில் வைக்கப்பட்டிருந்த ரூ.8 ஆயிரம், சில்லறை நாணயங்களாக வைக்கப்பட்டிருந்த ரூ.25 ஆயிரம், மற்றும் கண்காணிப்பு கேமரா பதிவு செய்யும் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள டி.வி.ஆர். கருவி ஆகியவற்றையும் மர்ம நபர்கள் அங்காடியின் பூட்டை உடைத்து திருடிச்சென்று விட்டனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள், அங்காடி பூட்டை ‘கியாஸ் கட்டர்’ கொண்டு அறுத்து உடைத்துள்ளனர். பின்னர் முன்பக்கமுள்ள கண்ணாடியை ஒரு ஆள் நுழையும் அளவுக்கு உடைத்து எடுத்து உள்ளே சென்று பணம்-பொருட்களை திருடிச்சென்றது தெரிய வந்தது.

இந்த பல்பொருள் அங்காடி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தான் புதிதாக திறக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 12 கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. கடந்த சில நாட்களாகவே அங்காடியையும், அதன் வெளிப்புறம் பாதுகாப்பற்ற சூழலையும் நோட்டமிட்ட மர்ம நபர்கள், முன்பக்கமுள்ள கண்காணிப்பு கேமராவை திசை திருப்பி வைத்து அங்காடியில் இருந்த பணம்-பொருட்களுடன், காட்சிகளை பதிவு செய்யும் டி.வி.ஆர். கருவியையும் திருடிச்சென்றுள்ளனர்.

இதுகுறித்து தஞ்சை தாலுகா போலீசில் ஜான்சன் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பசுபதி, சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பல்பொருள் அங்காடியின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் சங்கிலி பறிப்பு, பூட்டியிருக்கும் வீடுகள், கடை மற்றும் அங்காடிகளில் தொடரும் திருட்டு சம்பவங்களால் தஞ்சையில் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Next Story