பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை கலெக்டர் தகவல்


பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 6 Oct 2018 10:30 PM GMT (Updated: 6 Oct 2018 7:10 PM GMT)

பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது :- பருவமழையை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் மிக பாதிப்பு உள்ள பகுதிகளாக 8 இடங்களும், அதிக பாதிப்பு ஏற்படும் இடங்கள் 39 எனவும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த இடங்களில் தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு அவைகள் தீவிரமாக கண்காணிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த இடத்தில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும் வெள்ள பாதிப்பு ஏற்படும் காலத்தில் பொதுமக்களை பாதுகாக்க ஏதுவாக பள்ளிக்கூடங்கள், சமுதாய கூடங்கள், திருமண மண்டபங்கள் என 660 தற்காலிக முகாம்கள் தயார் நிலையில் உள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் 91 ஆயிரத்து 440 மணல் மூட்டைகள், 3 ஆயிரத்து 880 தண்ணீர் உறிஞ்சும் எந்திரங்கள், 57 குடிநீர் லாரிகள் , 158 ஜெனரேட்டர்கள், 2 ஆயிரத்து 485 குடிநீர் தொட்டிகள், 256 புகை தெளிப்பான்கள், 136.55 டன் பிளச்சிங் பவுடர், 170 டிரான்ஸ்பார்மர்கள் தயார் நிலையில் உள்ளது. 42 மருத்துவ குழுவினரும், ஆம்புலன்ஸ் சேவைகளும் தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

கும்மிடிப்பூண்டி தாலுகாவில் பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் தாசில்தார் மதன் குப்புராஜ் தலைமையில் தாசில்தார் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் நடைபெற்றது. ஆய்வு கூட்டத்திற்கு பின்னர் கும்மிடிப்பூண்டி தாசில்தார் மதன் குப்புராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.

கும்மிடிப்பூண்டி தாலுகாவில் பொதுப்பணித்துறை பராமரிப்பில் 80 நீர் நிலைகளும், உள்ளாட்சித்துறை பராமரிப்பில் 91 நீர் நிலைகளும் உள்ளன. அவற்றின் தண்ணீர் அளவுகளை தீவிரமாக கண்காணித்து 75 சதவீதத்துக்கு மேல் தண்ணீர் வந்தால் அந்த இடத்தில் பாதுகாப்பான முறையில் தண்ணீரை வெளியேற்றிட துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இது தவிர தாலுகாவில் தற்போது பல்வேறு அரசு துறை அலுவலகங்களில் 25 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 20 ஜெனரேட்டர்கள், 10 பொக்லைன் எந்திரங்கள், தேவையான மரம் அறுக்கும் கருவிகள், மழை பாதிப்பு ஏற்படும் பகுதியில் பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு ஏற்ப 11 தற்காலிக நிவாரண முகாம்கள், 2 நிரந்தர முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. மழை பாதிப்பிற்கு உள்ளாகும் பொதுமக்களுக்கு நிவாரண முகாம்களில் வழங்குவதற்கு தேவையான உடமைகள், உணவு பொருட்கள் தாசில்தார் அலுவலகத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் பாம்பு பிடிக்கும் நபர்களும் தாலுகாவில் தயார் நிலையில் உள்ளனர்.

இது தவிர தாலுகாவில் உடனடியாக மழையால் பாதிக்கப்படும் பகுதிகள் என்ற வகையில் சுண்ணாம்புகுளம், பெரியஓபுளாபுரம், வல்லம்பேடு குப்பம், ஏனாதிமேல்பாக்கம், கும்புளி, பெரியசோழியம்பாக்கம் காரணி, மங்களம், சேப்பேடு உள்பட 13 கிராமங்கள் கண்டறியப்பட்டு அந்த பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் எடுக்கப்பட்டு உள்ளது.

Next Story