ஒரே இடத்தில் ஆம்னி பஸ்கள் அடுத்தடுத்து கவிழ்ந்தன டிரைவர் பலி, 20 பேர் படுகாயம்


ஒரே இடத்தில் ஆம்னி பஸ்கள் அடுத்தடுத்து கவிழ்ந்தன டிரைவர் பலி, 20 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 7 Oct 2018 11:00 PM GMT (Updated: 7 Oct 2018 7:35 PM GMT)

துவரங்குறிச்சி அருகே 2 ஆம்னி பஸ்கள் அடுத்தடுத்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். 20 பேர் படுகாயமடைந்தனர்.

வையம்பட்டி,

புதுச்சேரியில் இருந்து நேற்று முன்தினம் இரவு நாகர்கோவிலுக்கு ஒரு ஆம்னி பஸ் புறப்பட்டது. அதில் 26 பயணிகள், 2 டிரைவர்கள், ஒரு உதவியாளர் என மொத்தம் 29 பேர் இருந்தனர். நேற்று அதிகாலை திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியை அடுத்த கல்லுப்பட்டி என்ற இடத்தின் அருகே பஸ் சென்று கொண்டிருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் அங்கும், இங்குமாக ஓடி இடதுபுற பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பஸ்சை ஓட்டி வந்த சென்னை திருவேற்காடு பகுதியை சேர்ந்த ஏனோக்(வயது 31) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 18 பேர் படுகாயமடைந்தனர். துவரங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அருகில் இருந்தவர்கள் உதவியோடு காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை மற்றும் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். பலியான ஏனோக் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது சென்னையில் இருந்து நாகர்கோவில் நோக்கி 13 பயணிகளுடன் சென்ற ஆம்னி பஸ் அந்த இடத்தில் வந்த போது சாலையில் அங்கும் இங்குமாக சென்று மையப்பகுதியில் உள்ள தடுப்பில் மோதி எதிர்சாலையில் சென்று கவிழ்ந்தது. இந்த விபத்தில் 2 பேர் படுகாயமடைந்தனர்.

பின்னர் படுகாயமடைந்த 2 பேரையும் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த 2 விபத்துகள் குறித்தும் துவரங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பஸ்கள் அடுத்தடுத்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஒரே இடத்தில் 2 ஆம்னி பஸ்கள் விபத்துக்குள்ளானபோது அந்த பகுதியில் மழை பெய்து கொண்டு இருந்தது. இருப்பினும் மழையையும் பொருட்படுத்தாமல் 2 நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களின் போலீசாரும், துவரங்குறிச்சி போலீசாரும் பொதுமக்கள் உதவியோடு மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கல்லுப்பட்டி அருகே கடந்த 2 நாட்களில் மட்டும் இதுவரை 5 ஆம்னி பஸ்கள் விபத்தில் சிக்கியுள்ளன. ஒரே இடத்தில் பஸ்கள் கவிழ்ந்து விபத்துகள் ஏற்படுவதற்கு சாலை வழவழப்பு தன்மையுடன் அமைக்கப்பட்டு இருப்பதுதான் காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த சாலையை சரிசெய்திட வேண்டும் என்று பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் அதுதொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் தான் தற்போதும் ஒருவர் பலியாகி விட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். ஆகவே, இனியும் அதிகாரிகள் தாமதம் செய்யாமல் இந்த சாலையை சரிசெய்ய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story