புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு முதல் முறையாக முதியவர் உடல் தானம்


புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு முதல் முறையாக முதியவர் உடல் தானம்
x
தினத்தந்தி 7 Oct 2018 10:45 PM GMT (Updated: 7 Oct 2018 8:39 PM GMT)

புதுக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு முதல் முறையாக முதியவர் உடல் தானம் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை ரெயில் நிலையம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 80). இவரது மனைவி லெட்சுமி. இவர்களுக்கு மலர்விழி என்ற மகளும், சரவணபிரகாஷ் என்ற மகனும் உள்ளனர். இதில் சரவணபிரகாஷ் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். ராஜேந்திரன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தனது மகன், மகள் மற்றும் மனைவியின் சம்மதத்துடன் தனது உடலை தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தானம் செய்வதாக தெரிவித்து இருந்தார். இந்நிலையில் நேற்று காலை வயது முதிர்வின் காரணமாக ராஜேந்திரன் மரணம் அடைந்தார்.

இதையடுத்து சிங்கப்பூரில் உள்ள அவரது மகன் சரவணபிரகாஷிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் ராஜேந்திரன் மனைவி லெட்சுமி, மகன் சரவணபிரகாஷ், மகள் மலர்விழி ஆகியோர் ராஜேந்திரனின் விருப்பப்படி அவரது உடலை புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தானம் செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து தங்களது முடிவு குறித்து புதுக்கோட்டையில் உள்ள மருத்துவர் ராமதாஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் சாரதாவிடம் தெரிவித்தனர். பின்னர் அவர் உடலை தானம் பெற்றுக் கொள்வதாக தெரிவித்தனர்.

இதையடுத்து நேற்று மாலையில் சிங்கப்பூரில் இருந்து சரவணபிரகாஷ் புதுக்கோட்டைக்கு வந்தார். பின்னர் புதுக்கோட்டை ரெயில் நிலையம் பகுதியில் உள்ள வீட்டில் வைத்து ராஜேந்திரனுக்கு செய்ய வேண்டிய இறுதி சடங்குகளை சரவணபிரகாஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் செய்து முடித்தனர். தொடர்ந்து ராஜேந்திரனின் உறவினர்கள் அவரது உடலை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் அங்கு உடல்கூறு இயல் பிரிவு மருத்துவர்களிடம், ராஜேந்திரன் உறவினர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ராஜேந்திரனின் உடலை தானமாக கொடுத்தனர். தானமாக பெற்ற ராஜேந்திரன் உடலை வைத்து மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு விளக்கங்கள் அளிக்கப்பட உள்ளதாக மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் தெரிவித்தனர். புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ஒருவர் உடல்தானம் செய்வது என்பது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ராஜேந்திரனின் தம்பி மகன் மாது என்ற ராஜேஷ்குமார் நிருபர்களிடம் கூறுகையில், எனது பெரியப்பா ராஜேந்திரன் புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் முன்பு உணவகம் நடத்தி வந்தார். அவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அவரது குடும்பத்தினர் சம்மதத்துடன், அவரது உடலை தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தானம் செய்து இருந்தார். தற்போது புதுக்கோட்டையிலேயே அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளதால் எனது பெரியப்பாவின் ஆசைப்படி அவரது உடலை நாங்கள் எங்களது குடும்பத்தினரின் முழு சம்மதத்துடன் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக கொடுத்து உள்ளோம்.

இதேபோல அனைவரும் உடலை தானம் செய்ய முன்வர வேண்டும். எனது பெரியப்பா கண்தானம் செய்ய விரும்பியதால், திருச்சியில் உள்ள தனியார் கண் மருத்துவமனை மருத்துவர்கள் காலையில் வந்து ராஜேந்திரனின் கண்களை தானமாக பெற்று சென்றனர். புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடலை தானம் செய்வதாக பல விண்ணப்பங்கள் வந்து உள்ளன. ஆனால் முதல் முறையாக எனது பெரியப்பா ராஜேந்திரனின் உடல் தான் தானம் செய்யப்பட்டு உள்ளது என்றார்.

Next Story