கொங்கணாபுரத்தில் வேளாண்மை பொறியியல் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை


கொங்கணாபுரத்தில் வேளாண்மை பொறியியல் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
x
தினத்தந்தி 8 Oct 2018 10:15 PM GMT (Updated: 8 Oct 2018 6:51 PM GMT)

கொங்கணாபுரத்தில் வேளாண்மை பொறி யியல் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

எடப்பாடி,

கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வேளாண்மை அலுவலகமும், வேளாண்மை பொறியியல் துறை அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள பொறியியல் துறை அலுவலர்கள் கொங்கணாபுரம் வட்டாரத்திற்கு சரிவர வருவதில்லை என்றும், அவ்வாறு வரும் அலுவலர்கள் ஏதேனும் ஒரு காரணத்தை கூறிவிட்டு சென்றுவிடுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கொங்கணாபுரம் வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் பலர் நேற்று வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு பொறியியல் துறை அலுவலர்கள் யாரும் இல்லாததால் அந்த அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அங்கிருந்த ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த நிலை நீடித்தால் மாவட்ட கலெக்டரிடம் புகார் தெரிவிக்கப்படும் என விவசாயிகள் கூறினார்கள்.

இந்த போராட்டம் குறித்து விவசாய சங்க பிரதிநிதி ராஜேந்திரன் மற்றும் விவசாயிகள் கூறியதாவது:-

கொங்கணாபுரம் வட்டாரத்திற்கு உதவி செயற்பொறியாளர்கள் 3 பேர் உள்ளனர். இவர்கள் சரிவர விவசாய தோட்டங்களுக்கு கள ஆய்வுக்கு வருவதில்லை. வந்தாலும் ஏதேனும் காரணத்தை கூறிவிட்டு சென்று விடுகின்றனர். விவசாயிகளுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்களை தெரிவிப்பதில்லை. பொறியியல் துறை மூலம் கோடை உழவு செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.500 வழங்க வேண்டும். தடுப்பணை கட்டுதல், பண்ணைக்குட்டைகள் கட்டுதல் குறித்த விவரங்கள் சரிவர தெரிவிக்கப்படுவதில்லை.

இதுபோல் அலட்சியமாக இருந்ததால் கடந்த ஆண்டு நீடித்த நிலையான மானாவாரி இயக்கம் திட்டம் மூலம் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய ரூ.7½ லட்சம் நிதியை திருப்பி அனுப்பி விட்டனர். இந்த நிலை தொடர்ந்தால் விவசாயிகளை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த அலுவலகத்தில் நேற்று திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story