கொசு ஒழிப்பு பணிக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் கலெக்டர் ஆசியா மரியம் அறிவுறுத்தல்


கொசு ஒழிப்பு பணிக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் கலெக்டர் ஆசியா மரியம் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 8 Oct 2018 10:15 PM GMT (Updated: 8 Oct 2018 7:15 PM GMT)

கொசு ஒழிப்பு பணிக்கு வீடு தேடி வரும் தற்காலிக பணியாளர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கலெக்டர் ஆசியா மரியம் அறிவுறுத்தி உள்ளார்.

நாமக்கல்,

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- நாமக்கல் மாவட்டத்தில் வாரந்தோறும் ஒவ்வொரு வியாழக்கிழமையும் டெங்கு தடுப்பு தினம் அனுசரித்து, விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் வீடுகளில் உள்ள தண்ணீர் சேமிக்கும் சிமெண்டு தொட்டிகள், டிரம்கள், குடங்கள் பாத்திரங்கள் ஆகியவற்றில் புகுந்து முட்டையிடா வண்ணம் முழுமையாக மூடி வைக்க வேண்டும். மேலும் வீடுகளின் உள்ளே பிரிட்ஜ் மற்றும் பூந்தொட்டிகளில் கொசுப்புழு உற்பத்தி ஆவதை தடுக்கும் பொருட்டு தினசரி அவற்றை சுத்தம் செய்ய வேண்டும்.

இதேபோல் வீட்டிற்கு வெளியே உள்ள பயன்படுத்தப்படாத ஆட்டு உரல், டயர்கள், தேங்காய் ஓடுகள், உடைந்த பிளாஸ்டிக் குடங்கள், டம்ளர்கள் ஆகியவற்றை உடனுக்குடன் அப்புறப்படுத்துங்கள்.

அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், விடுதிகள், தொழில் நிலையங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், காலிமனைகள், பயன்பாடு இல்லாத வீடுகள், திரையரங்குகள், திருமண மண்டபங்கள், பஸ் மற்றும் ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் அதன் பொறுப்பாளர்கள் உரிய கால அளவுகளில் தீவிர கொசு ஒழிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும்.

கொசு ஒழிப்புபணி மேற்கொள்ள வீடு தேடி வரும் தற்காலிக பணியாளர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அனைத்து பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களில் காய்ச்சல் இருப்பவர்களின் பட்டியலை அருகாமையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

பொதுமக்கள் காய்ச்சல் ஏற்பட்டவுடன் தாமதிக்காமல் அருகாமையில் உள்ள அரசினர் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை நாடிச்சென்று உரிய பரிசோதனைகள் செய்து சிகிச்சை பெற வேண்டும்.

மேலும் பொதுமக்கள் காய்ச்சல் ஏற்பட்டால் மருந்து கடைகளில் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து, மாத்திரை பெறுவதையும், போலி டாக்டர்களிடம் சிகிச்சை பெறுவதையும் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story