உளுந்தூர்பேட்டை அருகே, மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு


உளுந்தூர்பேட்டை அருகே, மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு
x
தினத்தந்தி 9 Oct 2018 9:30 PM GMT (Updated: 9 Oct 2018 7:10 PM GMT)

உளுந்தூர்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

விழுப்புரம், 

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள இருவேல்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவரது மகன் அல்வின் ராஜ் (வயது 19). இவர் நேற்று முன்தினம் அயன்வேலூரில் உள்ள தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றார். அப்போது அங்கு உறவினர் வீட்டில் இருந்த மின்விளக்கு எரியவில்லை என தெரிகிறது.

இதனால் அல்வின்ராஜ் மின்விளக்கை சரிசெய்து கொண்டிருந்தார். அப்போது அல்வின்ராஜ் மீது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அல்வின்ராஜ் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதுபற்றி தகவல் அறிந்த திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அல்வின்ராஜ் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த வாலிபர், மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story