சேலத்தில் அய்யப்ப பக்தர்கள் உண்ணாவிரதம் கல்லூரி மாணவிகள் விளக்கேற்றி உறுதிமொழி


சேலத்தில் அய்யப்ப பக்தர்கள் உண்ணாவிரதம் கல்லூரி மாணவிகள் விளக்கேற்றி உறுதிமொழி
x
தினத்தந்தி 9 Oct 2018 10:45 PM GMT (Updated: 9 Oct 2018 7:36 PM GMT)

சபரிமலை விவகாரத்தில் தீர்ப்பை மறுசீராய்வு செய்ய கோரி சேலத்தில் அய்யப்ப பக்தர்கள் உண்ணாவிரதம், கல்லூரி மாணவிகள் விளக்கை கையில் ஏந்தி போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

சேலம்,

சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மறுசீராய்வு செய்ய கோரி சேலத்தில் அய்யப்ப பக்தர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்து கொண்ட கல்லூரி மாணவிகள் கைகளில் விளக்கேற்றி சபரிமலைக்கு செல்ல மாட்டோம் என்று உறுதி மொழி எடுத்து கொண்டனர்.

சேலம் சபரிமலை அய்யப்பா சேவா சமாஜம் சார்பில் கூட்டுப்பிரார்த்தனையுடன் கூடிய ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் சேலம் பழைய நாட்டாண்மை கழக கட்டிடம் அருகே நேற்று நடைபெற்றது. சமாஜத்தின் தலைவர் தினேஷ்குமார் தலைமை தாங்கினார். இந்து முன்னணி கோட்ட தலைவர் சந்தோஷ்குமார், பா.ஜனதா மாநகர் மாவட்ட தலைவர் கோபிநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜெயராம் கல்லூரி தாளாளர் ராஜேந்திரபிரசாத் போராட்டத்தை தொடங்கி வைத்தார். இதில், கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு சபரிமலையின் புனிதத்தை காப்போம் என்ற 108 அடி நீளமுள்ள விழிப்புணர்வு பேனரையும், கையில் விளக்கேற்றி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மறுசீராய்வு செய்ய வேண்டும். சபரிமலைக்கு செல்ல மாட்டோம் எனவும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மேலும் விழிப்புணர்வு பதாகையில் மாணவிகள் கையெழுத்திட்டனர்.

இதுகுறித்து அய்யப்பா சேவா சமாஜ நிர்வாகிகள் கூறியதாவது:- சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதனால் அய்யப்ப பக்தர்கள் மிகுந்த மனவேதனையில் உள்ளனர். இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும். கோவிலின் ஆகம விதிகள்படி அய்யப்பன் கோவிலுக்குள் 10 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் 50-வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தான் செல்லலாம் என்று உள்ளது.

சபரிமலையில் அய்யப்பன் பிரம்மச்சாரியாக இருப்பதால் பெண்கள் போகக்கூடாது என ஆகமவிதி உள்ளது. அந்த மரபுகளை காக்க வேண்டும். ஆண்டாண்டு காலமாக அதை நம்முடைய முன்னோர்கள் கடைபிடித்து வருகிறார்கள். எனவே, சபரிமலை கோவிலில் பெண்களுக்கு அனுமதி அளித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய கோரி சேலத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த உண்ணாவிரதத்தில் அய்யப்ப குருசாமிகள், அய்யப்ப பக்தர்கள், பா.ஜனதாவினர், இந்து முன்னணியினர், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story