6-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்: விவசாயிக்கு சாகும்வரை சிறை தண்டனை


6-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்: விவசாயிக்கு சாகும்வரை சிறை தண்டனை
x
தினத்தந்தி 10 Oct 2018 11:00 PM GMT (Updated: 10 Oct 2018 6:47 PM GMT)

6-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த விவசாயிக்கு சாகும்வரை சிறை தண்டனை விதித்து தஞ்சை மகளிர் விரைவு கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா செம்மன்குட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராமையன்(வயது 64). விவசாயியான இவர், கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22-ந் தேதி வயலில் ஆடு மேய்த்து கொண்டிருந்தார். இவருடன் மேலும் 3 பெண்களும் ஆடு மேய்த்தனர்.

அப்போது 6-ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர், பள்ளிக்கூடத்தில் தேர்வு எழுதிவிட்டு வீட்டிற்கு வந்து மதிய உணவு சாப்பிட்டார். பின்னர் அவர், ஆடு மேய்த்து கொண்டிருந்த தனது தாயை பார்ப்பதற்காக சென்றார். மகளை பார்த்தவுடன் அந்த பெண், அவளை ஆடு மேய்க்க சொல்லிவிட்டு சாப்பிடுவதற்காக வீட்டிற்கு சென்றார்.

சிறிது நேரத்தில் மற்ற 2 பெண்களும் தங்களது ஆடுகளை, மாணவியின் பாதுகாப்பில் விட்டு விட்டு வீட்டிற்கு சென்று விட்டனர். ராமையனும், மாணவியும் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தனர். அங்கு வேறு யாரும் இல்லாததால் திடீரென மாணவியின் கையை ராமையன் பிடித்து இழுத்து சென்று அங்குள்ள ஒரு மரத்தடியில் வைத்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார்.

மேலும் இதை யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் அந்த மாணவியை ராமையன் மிரட்டியுள்ளார். இதனால் அந்த மாணவி, இந்த சம்பவம் குறித்து யாரிடமும் சொல்லவில்லை.

இந்த சம்பவத்திற்கு பின்னர் அந்த மாணவிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கி கிடந்தார். இதை பார்த்த அவளின் தாயார், உடனே தனது மகளை ஒரத்தநாட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று விட்டு, பின்னர் தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். அங்கு மாணவியை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, அவள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரிய வந்தது. இந்த விஷயத்தை அறிந்த அந்த மாணவியின் தாய், நடந்த விவரத்தை மகளிடம் கேட்டறிந்தார்.

அப்போது அவள் அழுது கொண்டே நடந்த விவரத்தை கூறினார். இது குறித்து ஒரத்தநாடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் ராமையனை கைது செய்தனர். பின்னர் அவரை தஞ்சை மகளிர் விரைவு கோர்ட்டில் ஆஜர்படுத்தி வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி பாலகிருஷ்ணன் விசாரித்து வந்தார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

ராமையனுக்கு போக்சோ சட்டம் 5ஜெ(3) (உடலுறவு மூலம் பால்வினை நோய் பரப்புதல்) பிரிவின் கீழ் ஆயுள் தண்டனையும், 5(எம்) (12 வயதிற்குட்பட்டவரை பாலியல் பலாத்காரம் செய்தல்) பிரிவின் கீழ் ஆயுள் தண்டனையும், இந்திய தண்டனை சட்டம் 506(1) (கொலை மிரட்டல்) பிரிவின் கீழ் 6 மாதம் சிறை தண்டனையும், ரூ.2,500 அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்த தண்டனைகளை ராமையன், ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. மேலும் தண்டனை முடிந்தாலும் அவர், வாழ்நாள் முழுவதும் சாகும் வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி பாலகிருஷ்ணன் தனது தீர்ப்பில் கூறியிருந்தார். அரசு தரப்பில் வக்கீல் தேன்மொழி ஆஜராகி வாதாடினார்.

இந்த தீர்ப்பு குறித்து வக்கீல் தேன்மொழி கூறும்போது, 2 ஆயுள் தண்டனைகளையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தாலும் அரசு சலுகை, தண்டனை குறைப்பு எதுவும் பெற ராமையனுக்கு தகுதி இல்லை. அவர் சாகும் வரை சிறையில் இருக்க வேண்டும். சிறையில் அவர் இறந்த பின்னர் உடலை அவரது உறவினரிடம் ஒப்படைக்க வேண்டும். 12 வயதிற்குட்பட்ட மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவிக்கு போதுமான இழப்பீடு, அரசிடம் இருந்து பெற இலவச சட்ட உதவி மையத்தின் மூலம் பரிந்துரை செய்யப்படும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

தண்டனை விதிக்கப்பட்ட ராமையன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story