ஆனைமலையாறு– நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற கோரி விவசாயிகள் குடும்பத்துடன் பேரணி; திருப்பூரில் 15–ந் தேதி நடக்கிறது


ஆனைமலையாறு– நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற கோரி விவசாயிகள் குடும்பத்துடன் பேரணி; திருப்பூரில் 15–ந் தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 10 Oct 2018 11:00 PM GMT (Updated: 10 Oct 2018 7:06 PM GMT)

ஆனைமலையாறு– நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற கோரி திருப்பூரில் 15–ந் தேதி விவசாயிகள் குடும்பத்துடன் பேரணி செல்கிறார்கள்.

நெகமம்,

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணை மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 77 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறுகின்றன. பி.ஏ.பி. திட்டத்தின் ஆனைமலையாறு மற்றும் நல்லாறு திட்டங்கள் இன்னும் செயல்படுத்தப்படாமல் உள்ளது. இந்த திட்டத்தை உடனடியாக நிறைவேற்றக்கோரி விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் தீர்வு ஏற்படவில்லை.

இந்த நிலையில் அனைவரையும் ஒன்று திரட்டி போராட்டங்களை நடத்த விவசாயிகள் தயாராகி வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி திருப்பூரில் வருகிற 15–ந்தேதி விவசாயிகள் பேரணி நடத்துகின்றனர். இந்த பேரணியில் பி.ஏ.பி. திட்ட திருமூர்த்தி நீர்தேக்கம், பாசன சங்க தலைவர்கள், ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர்கள், பாசன விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் மற்றும் நல்லாறு இயக்கத்தினர் கலந்து கொள்கின்றனர்.

பேரணி நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நெகமத்தில் நடந்தது. இதற்கு பகிர்மானகுழு தலைவர் ஆண்டிபாளையம் நல்லதம்பி தலைமை தாங்கினார். கூட்டமைப்பு தலைவர் ராஜகோபால், அருண், ஜெயபால், கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் மெடிக்கல் பரமசிவம் பேசியதாவது:–

ஆனைமலையாறு மற்றும் நல்லாறு திட்டங்களை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும். கேரள அரசு இடைமலையாறு அனையை கட்டி நீரை தேக்கி விவசாயத்துக்கு பயன்படுத்தி வருகிறது. எனவே ஒப்பந்தப்படி 1–ந்தேதி முதல் 31–ந்தேதி வரை நீராறில் இருந்து கேரளாவுக்கு கொடுக்கும் தண்ணீரை உடனே நிறுத்த வேண்டும். தமிழக– கேரள மாநிலங்கள் இடையே போடப்பட்ட பி.ஏ.பி. ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும்.

நீர்பங்கீடு முறையில் உள்ள குளறுபடிகளை சரிசெய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தமிழக அரசை வலியுறுத்தி கவன ஈர்ப்பு எழுச்சி பேரணி திருப்பூரில் நடைபெற உள்ளது. இந்த பேரணியில் பி.ஏ.பி. பாசன விவசாயிகள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும். ஆனைமலையாறு மற்றும் நல்லாறு திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்தால் தான் வருங்கால சந்ததிகளை காப்பாற்ற முடியும். ஆகவே அனைவரும் குடும்பத்துடன் கண்டிப்பாக பேரணியில் கலந்து கொள்ள வேண்டும். இதுகுறித்து கிராமங்கள் தோறும் சென்று துண்டு பிரசுரம் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story