டெங்கு கொசு உற்பத்தியை தடுக்கும் வகையில் பொது மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்


டெங்கு கொசு உற்பத்தியை தடுக்கும் வகையில் பொது மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 10 Oct 2018 10:30 PM GMT (Updated: 10 Oct 2018 7:13 PM GMT)

டெங்கு கொசு உற்பத்தியை தடுக்கும் வகையில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் அறிவுறுத்தி உள்ளார்.

வேளாங்கண்ணி,

நாகை நகராட்சி, நாகூர் சிவன் சன்னதி தெருவில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தூய்மை பணிகளை கலெக்டர் சுரேஷ்குமார் பார்வையிட்டார். பின்னர் அவர் குடியிருப்பு பகுதிகளில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் தண்ணீர் தேங்காமல் இருக்கவும், வீடுகளை சுற்றியுள்ள பொருட்களில் மழைநீர் தேங்குவதால் கொசு உற்பத்தியாகி அதன் மூலம் சுகாதாரக்கேடு ஏற்படுவதை தடுக்கும் வகையில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

தொடர்ந்து வேளாங் கண்ணி் மற்றும் நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம், தேமங்கலம் ஆகிய இடங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு நேரடியாக சென்று அங்குள்ள புறநோயாளிகள் பிரிவு, பொருள் வைப்பறை, அவசர சிகிச்சை பிரிவு, ஆய்வுக்கூடம், ஊசி போடும் அறை, பிரசவ உள்நோயாளிகள் பிரிவு, பொது உள் நோயாளிகள் பிரிவு, ரத்்த பரிசோதனை அறை ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு பணிபுரியும் மருத்துவ அலுவலர்கள் மற்றும் பணியாளர்களிடம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் கனிவுடன் பரிசோதித்து, அவர்களுக்கு உரிய சிகி்ச்சை அளித்திட வேண்டும் என அறிவுறுத்தினார்.

வேளாங்கண்ணி சிறப்புநிலை பேரூராட்சி, மாதாகுளம் அருகில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் அமைக்கப்பட்டுள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் இருந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக குடிநீர் வினியோகம் செய்யப்படுவதை ஆய்வு செய்து, குடிநீர் தொட்டியினை சீரான கால இடைவெளியில் குளோரினேசன் செய்து, பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய அலுவலர்களை அறிவுறுத்தினார்.

பின்னர் வேளாங் கண்ணி- கிராமத்துமேடு சாலையில் வேளாங்கண்ணி பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் ரூ.27 கோடியே 92 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின் போது கலெக்டர் சுரேஷ்குமார் கூறுகையில், கொசுக்கள் மூலம் பரவும் நோயில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள நோய்ப்பற்றிய விழிப்புணர்வு தேவைப்படுகிறது. எனவே பொதுமக்கள் தங்கள் வீடுகளை சுற்றி தேங்காய் மட்டைகள், பிளாஸ்டிக் பொருட்கள், டயர்கள் மற்றும் உடைந்த மண்பாண்டங்கள் ஆகியவற்றில் மழைநீர் தேங்காமல் பார்த்து கொள்வதுடன், வீட்டு உபயோத்திற்காக சேமித்து வைத்திருக்கும் குடிநீர் பானைகளை நன்கு மூடி வைத்து பயன்படுத்த வேண்டும் என்றார்.

ஆய்வின் போது நாகை உதவி கலெக்டர் கமல்கிஷோர், துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) சண்முகசுந்தரம், மாவட்ட பூச்சியியல் வல்லுனர் சுப்பிரமணியன், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ரவிச்சந்திரன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் தமிழரசன், நகர்நல அலுவலர் பிரபு, வேளாங்கண்ணி நகர செயலாளர் தாமஸன் பிராங்கிளின் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story