நாமக்கல்லில் ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்


நாமக்கல்லில் ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Oct 2018 10:45 PM GMT (Updated: 10 Oct 2018 9:29 PM GMT)

புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாமக்கல்லில் தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

நாமக்கல்,

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு ஏற்ப ஓய்வூதியத்தை வருமான வரி சட்டத்தின் கீழ் இணைக்க கூடாது. தமிழக அரசு ஓய்வூதியர்களுக்கு 21 மாத நிலுவைத்தொகை, குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் மற்றும் மாத மருத்துவப்படி ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் பூங்கா சாலையில் நேற்று தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் செயலாளர் காளியப்பன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் ஜெகதீசன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல அமைப்பு மாநில குழு உறுப்பினர் சந்திரசேகரன், தமிழ்நாடு ஓய்வுபெற்ற அனைத்து ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தமிழ்நாடு ஓய்வுபெற்ற அனைத்து ஆசிரியர் சங்க மாநில உதவி தலைவர் நல்லாகவுண்டர், தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் இளங்கோவன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல அமைப்பின் கிளை தலைவர் பொன்னுசாமி உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த வேண்டும். 1.7.2018 முதல் மின்வாரியம், போக்குவரத்து கழகம், மாநகராட்சி, நகராட்சி மற்றும் உள்ளாட்சி ஓய்வூதியர்கள் அனைவரையும் அரசே காப்பீட்டு திட்டத்தில் சேர்த்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்றவர்களுக்கு நிபந்தனையின்றி சேமிப்பு நிதி வழங்க வேண்டும். மின்வாரியத்தில் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வைரவிழா சலுகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் தமிழ்நாடு ஓய்வுபெற்ற அனைத்து ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் கணபதி நன்றி கூறினார்.

Next Story