மின்சார ரெயிலில் சாகசம் செய்த கல்லூரி மாணவர் பலி


மின்சார ரெயிலில் சாகசம் செய்த கல்லூரி மாணவர் பலி
x
தினத்தந்தி 10 Oct 2018 11:24 PM GMT (Updated: 10 Oct 2018 11:24 PM GMT)

மின்சார ரெயிலில் சாகசத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

மும்பை, 

மும்பை மான்கூர்டு பகுதியை சேர்ந்தவர் முபாரக் சவுகான். டீ வியாபாரி. இவரது மகன் பிலால். இவர் வடலாவில் உள்ள கல்லூரியில் வணிகவியல் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்தநிலையில், நேற்று முன்தினம் மதியம் பிலால் வீட்டில் இருந்து கல்லூரிக்கு மின்சார ரெயிலில் சென்றார். அப்போது அவர் ரெயில் வாசலில் நின்று தண்டவாள ஓரம் இருக்கும் மின்கம்பங்களை தொட்டு சாகசத்தில் ஈடுபட்டுள்ளார்.

தவறி விழுந்து பலி

ரெயில் வடலா அருகே வந்தபோது திடீரென அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை அந்த வழியாக சென்ற மற்றொரு ரெயிலில் இருந்த மோட்டார் மேன் மீட்டு சி.எஸ்.எம்.டி.க்கு கொண்டு சென்றார். பின்னர் அங்கிருந்து மாணவர் சிகிச்சைக்காக ஜார்ஜ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மாணவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.

இந்த விபத்து குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story