திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் மண்டல அளவில் மாணவ-மாணவிகளுக்கான தடகள போட்டிகள்


திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் மண்டல அளவில் மாணவ-மாணவிகளுக்கான தடகள போட்டிகள்
x
தினத்தந்தி 11 Oct 2018 11:00 PM GMT (Updated: 11 Oct 2018 8:20 PM GMT)

திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் மண்டல அளவில் மாணவ-மாணவிகளுக்கான தடகள போட்டிகள் நடந்தது.

திருச்சி,

பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவ-மாணவிகளுக்கான குறுவட்ட அளவிலும், மாவட்ட அளவிலும் தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்தக்கட்டமாக மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் மண்டல அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான தடகள போட்டிகள் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

3 நாட்கள் நடக்கும் இந்த போட்டியில் திருச்சி, முசிறி, லால்குடி, அறந்தாங்கி, புதுக்கோட்டை ஆகிய 5 கல்வி மாவட்டங்களை சேர்ந்த 1,015 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். இதில் 14, 17, 19 ஆகிய வயது பிரிவினருக்கு 100 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்பட பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டது.

இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் 330 பேருக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது. போட்டிகள் இன்றுடன் (வெள்ளிக்கிழமை) முடிகிறது. இந்த போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பார்கள் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story