தொண்டாமுத்தூர் அருகே : மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் சாவு


தொண்டாமுத்தூர் அருகே : மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் சாவு
x
தினத்தந்தி 11 Oct 2018 10:00 PM GMT (Updated: 11 Oct 2018 8:25 PM GMT)

தொண்டாமுத்தூர் அருகே மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

பேரூர், 


தேனி மாவட்டம் சங்கராபுரத்தை சேர்ந்தவர் மோகன் (வயது 36). இவர் கோவை புதுப்பாளையம் மேற்கு சித்திரைச்சாவடி பகுதியில் தனியார் தோட்டத்தில் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சூர்யா(13), கவுதம் ஆகிய 2 மகன்கள்.

இதில் சூர்யா தொண்டாமுத்தூர் அரசு ஆண்கள் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் மாலையில் சூர்யா தனது தம்பி கவுதமுடன் கால்பந்து விளையாடி கொண்டிருந்தான். அப்போது கால்பந்து அருகிலுள்ள தோட்டத்து கம்பி வேலி அருகே விழுந்தது.பந்தை எடுப்பதற்கு சூர்யா சென்றான்.

தோட்டத்தின் கம்பி வேலியில் மின்கம்பத்தில் இருந்து அறுந்து விழுந்த மின்கம்பி கிடந்துள்ளது. இதனை கவனிக்காத சூர்யா வேலியை தொட்டபோது, அவன் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டான்.
இதனைக்கண்ட அங்கிருந்தவர்கள் மாணவனை மீட்டு சிகிச்சைக்காக தொண்டாமுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சூர்யாவை பரிசோதித்த டாக்டர்கள் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story