கேபிள் டி.வி. செட்டாப் பாக்சை சரிசெய்தபோது மின்சாரம் பாய்ந்து மெக்கானிக் பலி


கேபிள் டி.வி. செட்டாப் பாக்சை சரிசெய்தபோது மின்சாரம் பாய்ந்து மெக்கானிக் பலி
x
தினத்தந்தி 11 Oct 2018 9:45 PM GMT (Updated: 11 Oct 2018 8:57 PM GMT)

பட்டிவீரன்பட்டி அருகே கேபிள் டி.வி. செட்டாப் பாக்சை சரிசெய்தபோது மின்சாரம் பாய்ந்து மெக்கானிக் பலியானார்.

பட்டிவீரன்பட்டி, 

பட்டிவீரன்பட்டி அருகே உள்ள அய்யம்பாளையம் 5-வது வார்டு கிழக்குதெருவை சேர்ந்தவர் முருகன். அவருடைய மகன் கார்த்திக் (வயது 18). இவர், வத்தலக்குண்டுவில் உள்ள ஒரு ஒர்க்‌ஷாப்பில் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு கார்த்திக் வீட்டில் டி.வி.யில் நிகழ்ச்சிகளை பார்த்து கொண்டிருந்தார்.

திடீரென டி.வி.யில் நிகழ்ச்சிகள் தெளிவாக தெரியவில்லை. இதனால் அவர் வீட்டில் இருந்த அரசு கேபிள் டி.வி. செட்டாப் பாக்சுடன் இணைக்கப்பட்டுள்ள வயரை சரிசெய்து கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக கார்த்திக் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். இதைத் தொடர்ந்து பட்டிவீரன்பட்டி அரசு மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story