சின்னசேலம் அருகே: கத்தியை காட்டி மிரட்டி தச்சு தொழிலாளியிடம் நகை பறிப்பு - வாலிபர் கைது


சின்னசேலம் அருகே: கத்தியை காட்டி மிரட்டி தச்சு தொழிலாளியிடம் நகை பறிப்பு - வாலிபர் கைது
x
தினத்தந்தி 11 Oct 2018 10:00 PM GMT (Updated: 11 Oct 2018 9:25 PM GMT)

சின்னசேலம் அருகே கத்தியை காட்டி மிரட்டி தச்சு தொழிலாளியிடம் நகையை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சின்னசேலம், 


சின்னசேலம் அருகே உள்ள தென்செட்டியந்தல் பகுதியை சேர்ந்தவர் வேங்கடபதி (வயது 37), தச்சு தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் முருகன் மனைவி ரத்தினாம்பாள்(37). இவர் தமிழக ஊரக வாழ்வாதார திட்டத்தில் கணக்காளராக இருந்து வருகிறார். வேங்கடபதி நேற்று முன்தினம் இரவு சின்னசேலத்தில் இருந்து ரத்தினாம்பாளை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு தென்செட்டியந்தல் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

உலகங்காத்தான் என்ற இடத்தில் வந்த போது, 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் வேங்கடபதியை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி வேங்கடபதியிடம் இருந்த 2 பவுன் நகை மற்றும் ஏ.டி.எம். கார்டை பறித்தனர். அப்போது ஏ.டி.எம்.கார்டு ரகசிய எண்ணை கூறும்படி அவர்கள் கேட்டனர். உடனே வேங்கடபதி ரகசிய எண்ணை கூறினார்.

இதையடுத்து அவர்கள் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிள்களில் ஏறி அங்கிருந்து தப்பி சென்றனர். இது குறித்து ரத்தினாம்பாள் சின்னசேலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் தனிப்படை பிரிவு இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் கனியாமூர் கைகாட்டி என்ற இடத்தில் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை மறித்து, அதனை ஓட்டி வந்தவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். அதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர், கள்ளக்குறிச்சி கோட்டைமேடு பகுதியை சேர்ந்த ஜெயசந்திரன் மகன் சந்திரசேகரன்(21) என்பதும், அதே பகுதியை சேர்ந்த பச்சையப்பன் மகன் ரமேஷ், முருகேசன் மகன் சின்னதுரை, கிருஷ்ணமூர்த்தி ஆகியோருடன் சேர்ந்து வேங்கடபதியிடம் 2 பவுன் நகை மற்றும் ஏ.டி.எம்.கார்டை பறித்ததும், பின்னர் அந்த ஏ.டி.எம்.கார்டை பயன்படுத்தி ரூ.5 ஆயிரம் எடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரசேகரனை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய ரமேஷ் உள்ளிட்ட 3 பேரை தேடி வருகின்றனர்.

Next Story