ஈரோடு அருகே கூலி தகராறில் தொழிலாளி அடித்து கொலையா? சாவில் மர்மம் என உறவினர்கள் புகார்


ஈரோடு அருகே கூலி தகராறில் தொழிலாளி அடித்து கொலையா? சாவில் மர்மம் என உறவினர்கள் புகார்
x
தினத்தந்தி 11 Oct 2018 11:54 PM GMT (Updated: 11 Oct 2018 11:54 PM GMT)

ஈரோடு அருகே தொழிலாளி சாவில் மர்மம் என உறவினர்கள் புகார் கூறியதால் அவர் அடித்து கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஈரோடு,

மொடக்குறிச்சி அருகே உள்ள தூரப்பாளையம் திருவள்ளுவர் வீதியை சேர்ந்தவர் குப்பன் (வயது 60). விவசாய கூலி தொழிலாளி. இவருடைய மனைவி வசந்தா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

சம்பவத்தன்று குப்பன் அதே பகுதியில் உள்ள ஒரு விவசாய தோட்டத்துக்கு வேலைக்கு சென்றார். வேலை முடிந்ததும் கூலி பணம் கொடுப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் குப்பன் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் குப்பனுக்கு வயிற்றில் கடுமையான வலி ஏற்பட்டது. அதனால் உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை குப்பன் பரிதாபமாக இறந்தார். இதைத்தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று காலை குப்பனின் உறவினர்கள் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் குப்பனின் உடலை வாங்க மறுத்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது பற்றிய தகவல் கிடைத்ததும் மொடக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உறவினர்கள் கூறும்போது, ‘குப்பனின் சாவில் மர்மம் உள்ளது. கூலி பண தகராறில் தாக்கப்பட்டதால் தான் அவர் இறந்துள்ளார். எனவே அவரை தாக்கியவரை உடனடியாக கைது செய்ய வேண்டும்’ என்றனர்.

அதற்கு போலீசார், ‘சம்பந்தப்பட்டவர் மீது வழக்குப்பதிவு செய்து உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே நீங்கள் உடலை வாங்கிச்செல்லுங்கள்’ என்றனர். அதை ஏற்க மறுத்த அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் குப்பன் சாவுக்கு காரணமானவர் களை கைது செய்யும் வரை, அவருடைய உடலை வாங்கமாட்டோம் என்று உறவினர்கள் உறுதியாக இருந்தனர். இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து கூலி தகராறில் குப்பன் அடித்து கொல்லப்பட்டாரா? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story