ஊட்டி ஆட்லி சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை


ஊட்டி ஆட்லி சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 12 Oct 2018 9:45 PM GMT (Updated: 12 Oct 2018 7:09 PM GMT)

ஊட்டி ஆட்லி சாலையில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஊட்டி,

ஊட்டி–கோத்தகிரி சாலையில் இருந்து ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு ஆட்லி சாலை செல்கிறது. இந்த சாலையின் அடியில் சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது. சாக்கடை கால்வாயில் ஏதேனும் அடைப்புகள் ஏற்பட்டால் அதனை சரிசெய்வதற்கு என்று குறிப்பிட்ட இடைவெளியில் இரும்பால் ஆன மூடிகள் போடப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஆட்லி சாலையில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் சாலையில் வழிந்தோடி கொண்டு இருக்கிறது.

இரும்பால் ஆன மூடியே தெரியாத வகையில், அதனை சாக்கடை கழிவுநீர் சூழ்ந்து உள்ளது. தொடர்ந்து மூன்று இடங்களில் சாக்கடை கழிவுநீர் வழிந்தோடுவதால், அந்த சாலையில் கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை பார்க்கிங் செய்து விட்டு தாவரவியல் பூங்காவுக்கு நடந்து செல்லும் போது மூக்கை பொத்தியபடி செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் அருகே குடியிருப்புகளில் வசிப்பவர்கள் பெரும் அவதி அடைந்து உள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:–

ஊட்டி நகராட்சி 5–வது வார்டுக்கு உட்பட்டது வண்ணார்பேட்டை பகுதி ஆகும். இந்த பகுதியில் ஆட்லி சாலையில் வெளிமாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் வார விடுமுறை நாட்கள் மட்டுமின்றி, மற்ற நாட்களிலும் வந்து சென்று கொண்டு இருக்கும். அந்த சாலையில் சாக்கடை கால்வாயின் மூடி தெரியாத வகையில் கழிவுநீர் சூழ்ந்து நிற்பதால், புதியதாக வரும் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் நிலை காணப்படுகிறது. அப்பகுதியை சுற்றிலும் கற்கள் வைக்கப்பட்டு உள்ளதால், நான்கு சக்கர வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

மேலும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும் போது, வாகனங்கள் சாக்கடை கழிவுநீரை அடித்து விட்டு செல்கிறது. இதனால் அவர்களது துணிகள் நாசம் ஆவதுடன், அவதி அடைந்து மிகுந்த மனவருத்தத்துக்கு உள்ளாகிறார்கள். நூற்றாண்டு பழமை வாய்ந்த மற்றும் சர்வதேச புகழ் பெற்ற தாவரவியல் பூங்கா இருக்கும் பகுதியில் சாக்கடை கழிவுநீர் வழிந்தோடி கொண்டு அவலத்தை ஏற்படுத்தி உள்ளது. அதன் காரணமாக நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சாக்கடை கால்வாய் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்து கழிவுநீர் சாலையில் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story