பிவண்டியில் ரூ.4 லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல் 5 பேர் கைது


பிவண்டியில் ரூ.4 லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல் 5 பேர் கைது
x
தினத்தந்தி 12 Oct 2018 10:45 PM GMT (Updated: 12 Oct 2018 8:10 PM GMT)

பிவண்டியில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

தானே மாவட்டம் பிவண்டி வாட்பே பகுதியில் சிலர் கள்ளநோட்டுகளுடன் வருவதாக நேற்று முன்தினம் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சாதாரண உடையில் சென்று கண்காணித்தனர்.

அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக கார் ஒன்று வந்தது. அதில் இருந்து 5 பேர் இறங்கினார்கள். அவர்கள் அங்குள்ள பான் கடையில் சென்று சிகரெட் வாங்கினார்கள். இதற்காக அவர்கள் கடைக்காரரிடம் 2,000 ரூபாய் நோட்டை கொடுத்தனர்.

இதை கவனித்த போலீசார் அங்கு சென்று அந்த நோட்டை வாங்கி பார்த்தனர். அப்போது அது கள்ளநோட்டு என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 5 பேரையும் அதிரடியாக கைது செய்தனர்.

மேலும் அவர்கள் வந்த காரில் அதிரடி சோதனை போட்டனர். அப்போது காருக்குள் அதிகளவில் இரண்டாயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ரூ.4 லட்சம் மதிப்புள்ள அந்த கள்ளநோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்களது பெயர் ரேஹன் அப்பாஸ் சேக் (வயது22), சபாத் முக்தார் அன்சாரி (19), அனிஸ் இக்பால் சேக் (31), கிஷோர் புலார் (25), ரோகித் சிங் (23) என்பது தெரியவந்தது.

அந்த கள்ளநோட்டுகள் அவர்களுக்கு எப்படி கிடைத்தது. அதை எங்கு கொண்டு சென்றனர் என்பதை கண்டறிய அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story