கும்மிடிப்பூண்டி அருகே லாரி- பஸ் மோதல்; பெண் பலி


கும்மிடிப்பூண்டி அருகே லாரி- பஸ் மோதல்; பெண் பலி
x
தினத்தந்தி 12 Oct 2018 10:28 PM GMT (Updated: 12 Oct 2018 10:28 PM GMT)

கும்மிடிப்பூண்டி அருகே லாரி- பஸ் மோதிய விபத்தில் பெண் பலியானார்.

கும்மிடிப்பூண்டி,

சென்னை கோயம்பேடு டெப்போவை சேர்ந்த அரசு பஸ் தடம் எண் 103 சென்னை கோயம்பேடுக்கும், ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும் இடையே இயக்கப்படுகிறது. நேற்று அதிகாலை 4½ மணிக்கு இந்த பஸ் ஒன்று கட் சர்வீசாக ஆந்திர மாநிலம் சூளூர்பேட்டையில் இருந்து சென்னை கோயம்பேடுக்கு இயக்கப்பட்டது. இந்த பஸ்சை திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டையை சேர்ந்த சிட்டிபாபு (வயது54) ஓட்டிச்சென்றார். கண்டக்டராக ராமஞ்சேரியை அடுத்த தோம்பூர் கிராமத்தை சேர்ந்த தரணி (31) பணியில் இருந்தார்.

நேற்று காலை 6 மணியளவில் மேற்கண்ட அரசு பஸ் 32 பயணிகளுடன் கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள பஞ்செட்டி பகுதியில் உள்ள சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.

அப்போது அதே திசையில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த லாரியின் பின்னால், அரசு பஸ் கண் இமைக்கும் நேரத்தில் வேகமாக மோதியது. இதில் பஸ் சேதம் அடைந்த நிலையில் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் பலர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்தில் ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரியை அடுத்த கோபன்பாளையம் கிராமத்தை சேர்ந்த குமாரி லட்சுமி (51) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். .அவரது கணவர் நாகராஜ் ராவ் (54), உறவினரான பஞ்செட்டியை அடுத்த சிறுணியம் கிராமத்தை சேர்ந்த பென்டை எலிசா (39) மற்றும் அவர்களுடன் பஸ்சில் பயணம் செய்த கும்மிடிப்பூண்டியை அடுத்த தம்புரெட்டிபாளையம் கிராமத்தைச்சேர்ந்த அரசு பஸ் டிரைவர் ரகு (55), கும்மிடிப்பூண்டி பிர்த்வி நகரை சேர்ந்த நாதமுனி (53) போந்தவாக்கம் கிராமத்தை சேர்ந்த சந்திரகுமார் (33), மற்றும் 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் உள்பட மொத்தம் 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் சென்னை அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்தில் உயிரிழந்த குமாரி லட்சுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் அரசு பஸ் டிரைவர் சிட்டிபாபு அஜாக்கிரதையாக பஸ்சை ஓட்டியதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story