குறைந்த விலையில் மண்எண்ணெய் வாங்கி தருவதாக கூறி மராட்டிய வியாபாரியிடம் ரூ.5¼ லட்சம் மோசடி 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு


குறைந்த விலையில் மண்எண்ணெய் வாங்கி தருவதாக கூறி மராட்டிய வியாபாரியிடம் ரூ.5¼ லட்சம் மோசடி 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 12 Oct 2018 11:29 PM GMT (Updated: 12 Oct 2018 11:29 PM GMT)

மராட்டிய வியாபாரியிடம் குறைந்த விலையில் மண்எண்ணெய் வாங்கி தருவதாக கூறி 5¼ லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்

பெரம்பூர்,

மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர் அஜய் (வயது 35). மண்எண்ணெய் வியாபாரி. இவர் சில மாதங்களுக்கு முன்பு திருப்பதி கோவிலுக்கு வந்துள்ளார். அப்போது பாபுலால் என்பவர் தான் சென்னை கொடுங்கையூரை சேர்ந்தவர் என அஜய் உடன் அறிமுகப்படுத்தி கொண்டார். மேலும் சென்னையில் டேங்கர் லாரி வைத்து ஓட்டி வருவதாகவும், குறைந்த விலையில் மண்எண்ணெய் வாங்கி தருவதாகவும் அஜய்க்கு, பாபுலால் ஆசைவார்த்தை கூறியுள்ளார்.இதை நம்பிய அஜய் தன்னுடைய ஊருக்கு சென்ற பிறகு பாபுலாலை செல்போனில் தொடர்பு கொண்டு மண்எண்ணெய் வாங்கி தருமாறு கூறியுள்ளார். குறைந்த விலையில் மண்எண்ணெய் வாங்கி தருவதாக பாபுலால் கூறியதால் தன் நண்பர் ஒருவருடன் சென்னைக்கு அஜய் வந்தார். அவர்களை தண்டையார்பேட்டையில் உள்ள பெட்ரோலிய நிறுவனத்துக்கு வருமாறு பாபுலால் கூறினார். அங்கு பாபுலால் தன் நண்பர் ஒருவருடன் சென்றார்.

ரூ.5¼ லட்சம்

பின்னர் அஜயிடம் ரூ.5¼ லட்சத்தை பெற்றுக்கொண்ட பாபுலால், பணத்தை கட்டி வருவதாக கூறி சென்றார். சிறிது நேரத்தில் தன்னுடன் வந்த நண்பரிடம் பின்பக்கமாக தப்பி வந்து விடு என செல்போனில் பாபுலால் கூறியுள்ளார். அதன்படி அவர் வந்ததும் 2 பேரும் அங்கிருந்து பணத்துடன் ஆட்டோவில் தப்பி சென்றனர்.

வெகு நேரமாக இருவரையும் காணாததால், தான் ஏமாற்றப்பட்டதை அஜய் உணர்ந்தார். பின்னர் ரூ.5¼ லட்சம் மோசடி குறித்து அவர் தண்டையார்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து பாபுலால் உள்ளிட்ட 2 பேரையும் தேடி வருகின்றனர்.

Next Story