புரட்டாசி கடைசி சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் தரிசனம்


புரட்டாசி கடைசி சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 13 Oct 2018 10:30 PM GMT (Updated: 13 Oct 2018 2:46 PM GMT)

புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையான நேற்று குமரி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

நாகர்கோவில்,

குமரி மாவட்ட பெருமாள் கோவில்களில் புரட்டாசி மாத சனிக்கிழமை தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமையான நேற்று குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

நாகர்கோவிலை பொறுத்த வரையில் வடிவீஸ்வரத்தில் உள்ள இடர்தீர்த்த பெருமாள் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். கோவிலில் அதிகாலை 5 மணிக்கு நிர்மால்ய பூஜை, காலை 9 மணிக்கு உற்சவமூர்த்திக்கு அபிஷேகம், தீபாராதனை மற்றும் லட்சார்ச்சனை ஆகியவை நடந்தன. பின்னர் 10 மணிக்கு அன்னதானம் தொடங்கியது. அதைத் தொடர்ந்து பகல் 12 மணிக்கு அலங்கார தீபாராதனையும், மாலை 6 மணிக்கு சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது.

இதேபோல பறக்கை மதுசூதனப்பெருமாள் கோவில், சுசீந்திரம் துவாரகை கிருஷ்ணன் கோவில் மற்றும் திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோவிலில் அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடந்தன.

மேலும் குமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களான திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவில், கிருஷ்ணன் கோவில்  கிருஷ்ணசாமி கோவில், பார்த்தீபபுரம் பார்த்தசாரதி கோவில், தோவாளை கிருஷ்ணசாமி கோவில், வடசேரி பாலகிருஷ்ணன்கோவில், சுசீந்திரம் இரட்டைத்தெரு குலசேகரபெருமாள் கோவில், கோட்டார் வாகையடி ஏழகரம் பெருமாள் கோவில், வட்டகரை தென்திருப்பதி வெங்கடாசலபதி கோவில் உள்ளிட்ட அனைத்து பெருமாள் கோவில்களிலும் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பெருமாளை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

Next Story