மேலகரமனூர், மாதர்பாக்கம் ஊராட்சிகளில் அம்மா திட்ட முகாம்


மேலகரமனூர், மாதர்பாக்கம் ஊராட்சிகளில் அம்மா திட்ட முகாம்
x
தினத்தந்தி 13 Oct 2018 10:30 PM GMT (Updated: 13 Oct 2018 5:43 PM GMT)

மேலகரமனூர், மாதர்பாக்கம் ஊராட்சிகளில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது.

வண்டலூர்,

ஊத்துக்கோட்டை அருகே உள்ள மேலகரமனூர் ஊராட்சியில் தமிழக அரசின் சார்பில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. வருவாய் ஆய்வாளர் ஜானகி தலைமை தாங்கினார். கிராம நிர்வாக அலுவலர்கள் நந்தகோபால், குணசீலன், சுஜாதா ஆகியோர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

துயர்துடைப்பு தாசில்தார் லதா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றார். இந்த முகாமில் சாதி சான்று, வீட்டுமனை பட்டா, பட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை, பிறப்பு, இறப்பு சான்றிதழ், முதியோர் உதவித்தொகை கேட்டு மொத்தம் 40 பேர் துயர்துடைப்பு தாசில்தார் லதாவிடம் மனுக்கள் அளித்தனர்.

அனைத்து மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. ஊராட்சி உதவியாளர் குணகேசகரன், கிராம உதவியாளர் சங்கரய்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கும்மிடிப்பூண்டியை அடுத்த மாதர்பாக்கம் ஊராட்சியில் அம்மா திட்ட முகாம், மாதர்பாக்கம் கிராம நிர்வாக அலுவலக வளாகத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. வருவாய் ஆய்வாளர் கண்ணன், கிராம நிர்வாக அதிகாரி சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் முதியோர் உதவித்தொகை தொடர்பாக மொத்தம் 34 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 5 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு நல உதவி திட்ட சான்றிதழ்களை சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் பாலாஜி வழங்கினார்.

முன்னதாக மாநெல்லூர் கிராம நிர்வாக அதிகாரி நவீன் வரவேற்றார். முடிவில் ஏகுமதுரை கிராம நிர்வாக அதிகாரி காமராஜ் நன்றி கூறினார்.

காஞ்சீபுரம் மாவட்டம் மண்ணிவாக்கம் கிராமத்தில் தமிழக அரசின் சார்பில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மண்ணிவாக்கம் ஊராட்சி மன்ற செயலர் ராமபக்தன் தலைமை தாங்கினார்.

முன்னாள் அ.தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி புருஷோத்தமன், ஊராட்சி அ.தி.மு.க. செயலாளர் துளசிங்கம், வருவாய் ஆய்வாளர் அமுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு வட்ட வழங்கல் அலுவலர் பூங்கொடி கலந்து கொண்டு அம்மா திட்ட முகாமை தொடங்கி வைத்து, பொதுமக்களிடம் இருந்து ரேஷன் கார்டுகளில் பெயர் நீக்கம், நிறுத்தம், சேர்த்தல், சாதி சான்றிதழ் வழங்குதல் உள்பட பல்வேறு மனுக்களை பெற்றார்.

பின்னர் அவர் உடனடியாக சில மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து அதற்காக உத்தரவு நகலை பொதுமக்களுக்கு வழங்கினார். மற்ற மனுக்கள் மீது உரிய அதிகாரிகள் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பார்கள் என்று அவர் தெரிவித்தார்.

இதில் கிராம நிர்வாக அதிகாரி சரவணன், முன்னாள் அ.தி.மு.க. ஊராட்சி மன்ற துணை தலைவர் கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையை அடுத்த நாட்டரசன்பட்டு ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வருவாய் ஆய்வாளர் இந்திராணி தலைமை தாங்கினார். குன்றத்தூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் எழிச்சூர் ராமச்சந்திரன், வருவாய் உதவியாளர் தாட்சாயிணி, நாட்டரசன்பட்டு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிறுவஞ்சூர் வேதகிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.எல்.ஏ. பழனி கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் 3 பேருக்கு பட்டா நகல், 2 பேருக்கு இறப்பு சான்றிதழை தாசில்தார் வழங்கினார். மேலும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 34 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன.

இதில் 3 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மீதி மனுக்கள் விசாரனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் கிராம நிர்வாக அலுவலர் வீரராகவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story