கொட்டாம்பட்டி அருகே மர்ம காய்ச்சலால் கிராம மக்கள் பாதிப்பு


கொட்டாம்பட்டி அருகே மர்ம காய்ச்சலால் கிராம மக்கள் பாதிப்பு
x
தினத்தந்தி 13 Oct 2018 10:00 PM GMT (Updated: 13 Oct 2018 7:11 PM GMT)

கொட்டாம்பட்டி அருகே மர்ம காய்ச்சலால் கிராம மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கொட்டாம்பட்டி,

கொட்டாம்பட்டி யூனியனில் உள்ள கம்பூர் ஊராட்சியில் கம்பூர், அய்வத்தான்பட்டி, பெரியகற்பூரம்பட்டி, சின்ன கற்பூரம்பட்டி,தேனங்குடிபட்டி,கோவில்பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

கடந்த ஒரு வாரமாக இப்பகுதியில் மர்ம காய்ச்சல் பரவி கிராம மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அய்வத்தான்பட்டியில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மேலூர், கொட்டாம்பட்டி, கருங்காலக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் கருங்காலக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலூர் அரசு மருத்துவமனையில் இந்த கிராமத்தை சேர்ந்த பாண்டி (வயது40), கண்ணுச்சாமி (50) உள்பட 10–க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். மேலும் 300–க்கும் மேற்பட்டவர்கள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். குடும்பத்தில் ஒருவருக்கு வந்தால் அனைவருக்கும் அடுத்தடுத்து இந்த காய்ச்சல் பரவி வருவதாக கூறப்படுகிறது. குழந்தைகளை வெகுவாக தாக்கக்கூடிய இந்த மர்ம காய்ச்சலால் குழந்தைகள் பெரிதும் பாதிக்கபட்டுள்ளனர்.

எனவே மர்ம காய்ச்சலால் பாதிக்கபட்ட கிராமங்களில் அரசு நிரந்தர மருத்துவ முகாம் அமைத்து மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்த வேண்டும். சம்பந்தபட்ட அதிகாரிகள், ஊராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story