பேரிடர் இன்னல் குறைப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் நிர்மல்ராஜ் தொடங்கி வைத்தார்


பேரிடர் இன்னல் குறைப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் நிர்மல்ராஜ் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 13 Oct 2018 10:45 PM GMT (Updated: 13 Oct 2018 7:19 PM GMT)

திருவாரூரில் பேரிடர் இன்னல் குறைப்பு தின விழிப்புணர்வு ஊர் வலத்தை கலெக்டர் நிர்மல்ராஜ் தொடங்கி வைத்தார்.

திருவாரூர்,

திருவாரூரில் சர்வதேச பேரிடர் இன்னல் குறைப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். ஊர்வலம் திருவாரூர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு பஸ் நிலையம், பனகல் சாலை, தெற்கு வீதி வழியாக சென்று நகராட்சி அலுவலகத்தை அடைந்தது.

பின்னர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீயணைப்புத்துறை மற்றும் வருவாய்துறை சார்பில் பேரிடர் காலங்களில் எவ்வாறு மீட்பு பணிகளில் ஈடுபடுவது குறித்து செயல்முறை ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் முன்னிலை வகித்தார்.

இதில் பேரிடர் காலங்களில் கட்டிட இடர்பாடுகளிலும், தீ விபத்தில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தல் குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் பொதுமக்களின் உயிர்களையும், அவர்களது உடமைகளையும் எவ்வாறு பாதுகாப்பாக மீட்பது குறித்து விளக்கப்பட்டது.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சக்திமணி, உதவி கலெக்டர் முருகதாஸ், மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் முருகேசன், திருவாரூர் தாசில்தார் குணசீலி, பேரிடர் மேலாண்மை தனி தாசில்தார் உதயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story