மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி சாவு ஓட்டி வந்த கொத்தனாரும் பலியான பரிதாபம்


மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி சாவு ஓட்டி வந்த கொத்தனாரும் பலியான பரிதாபம்
x
தினத்தந்தி 13 Oct 2018 10:45 PM GMT (Updated: 13 Oct 2018 7:26 PM GMT)

கும்பகோணம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி இறந்தார். இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த கொத்தனாரும் பரிதாபமாக பலியானார்.

திருவிடைமருதூர்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள வானாபுரம் கீழத்தெருவை சேர்ந்தவர் கல்யாணி(வயது 80). இவர் நேற்று முன்தினம் இரவு கோவிந்தபுரத்தில் உள்ள கும்பகோணம்-மயிலாடுதுறை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக நாகை மாவட்டம் திருவாவடுதுறை திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த மணி மகன் சங்கர்(26), மோட்டார் சைக்கிளில் வந்தார். இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக சங்கர் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிள், கல்யாணி மீது மோதியது.

இதில் கல்யாணி படுகாயம் அடைந்தார். அதேபோல மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சங்கரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இருவரையும் அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கல்யாணி பரிதாபமாக இறந்தார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சங்கரை, தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவரும் பரிதாபமாக உயிரிழந்தார். இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார்.

இந்த விபத்து குறித்து திருவிடைமருதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story