பேரிடர் தவிர்ப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம்


பேரிடர் தவிர்ப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 13 Oct 2018 10:30 PM GMT (Updated: 13 Oct 2018 8:41 PM GMT)

புதுக்கோட்டை மாவட்டத்தில் பேரிடர் தவிர்ப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

ஆவுடையார்கோவில்,

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவிலில் பேரிடர் தவிர்ப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை ஆவுடையார்கோவில் தாசில்தார் ஜமுனா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து தொடங்கிய ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துகண்்ணு, தீயணைப்பு நிலைய அலுவலர் அப்துல்ரகுமான், தீயணைப்பு வீரர்கள், வருவாய்த்துறை ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள், கிராம உதவியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள் , மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். தொடர்ந்து தீயணைப்பு துறையினர் பேரிடர் ஏற்படும் போது எப்படி செயல்பட வேண்டும் என்று பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நிலைய அலுவலர்கள் செயல்விளக்கம் அளித்தனர்.

அறந்தாங்கியில் பேரிடர் தவிர்ப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை கோட்டாட்சியர் பஞ்சவர்ணம் தலைமை தாங்கினார். தாசில்தார் கருப்பையா, தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன் முன்னிலை வகித்தனர். அறந்தாங்கி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து தொடங்கிய ஊர்வலம் பெரியகடை வீதி, கட்டுமாவடிமுக்கம் வழியாக சென்றது. தொடர்ந்து பேரிடர் காலத்தில் இடர்பாடுகளை எப்படி எதிர்கொள்வது என தீயணைப்பு வீரர்கள் செயல் முறை விளக்கம் அளித்தனர். இதில் வருவாய் அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

விராலிமலையில் பேரிடர் தவிர்ப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெயபாரதி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். ஊர்வலமானது விராலிமலை புனித தெரசாள் உயர்நிலைப்பள்ளியில் இருந்து தொடங்கி எம்.ஜி.ஆர். நகர் வழியாக வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவு பெற்றது. இதில் பேரிடர் காலங்களில் எப்படி விழிப்புடன் இருந்து உயிரையும் உடைமைகளை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் இலுப்பூர் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் சார்பில் பேரிடர் காலங்களில் தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து செய்முறை விளக்கம் காண்பிக்கப்பட்டது. இதில் விராலிமலை தாசில்தார் லூர்துசாமி, வருவாய்த்துறை அதிகாரிகள், அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கந்தர்வகோட்டையில் தீயணைப்புத்துறை மற்றும் வருவாய்த்துறையின் சார்பில் பேரிடர் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை தாசில்தார் ஆரமுததேவசேனா தொடங்கி வைத்தார். கந்தர்வகோட்டை தாலுகா அலுவலகத்திலிருந்து தொடங்கிய ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இதில் தீயணைப்புத்துறை நிலைய அதிகாரி ஆரோக்கியசாமி, தீயணைப்புத்துறை அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர். முடிவில் கந்தர்வகோட்டை பழைய பஸ் நிலையத்தில் பேரிடர் மீட்பு பணி ஒத்திகையினை தீயணைப்புத்துறை விரர்கள் செய்து காண்பித்தனர். முடிவில் மண்டல துணை தாசில்தார் ராமசாமி நன்றி கூறினார்.

ஆலங்குடி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையம் சார்பில் பேரிடர் தவிர்ப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதற்கு தீயணைப்பு அலுவலர் பழனியப்பன் தலைமை தாங்கினார். ஆலங்குடி வட்டாட்சியர் ரெத்தினாவதி, துணை வட்டாட்சியர் பிரகாஷ், சமூக பாதுகாப்பு தாசில்தார் யோகேஸ்வரன் முன்னிலை வகித்தனர். இதில் சந்தைப்பேட்டை செட்டிக்குளத்தில் பேரிடர் காலங்களில் எவ்வாறு செயல்படுவது என ஒத்திகை செய்து காண்பிக்கப்பட்டது.

Next Story