முதல்-அமைச்சர் பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை அமைச்சர் தங்கமணி பேட்டி


முதல்-அமைச்சர் பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை அமைச்சர் தங்கமணி பேட்டி
x
தினத்தந்தி 13 Oct 2018 11:15 PM GMT (Updated: 13 Oct 2018 9:08 PM GMT)

நெடுஞ்சாலைத்துறை வழக்கு தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என அமைச்சர் தங்கமணி கூறினார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நேற்று தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நெடுஞ்சாலைத்துறை வழக்கு தொடர்பாக, சி.பி.ஐ. விசாரணைக்கு கோர்ட்டு உத்தரவிட்டதால் முதல்-அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று மு.க.ஸ்டாலின், ராமதாஸ் போன்றோர் கூறுகின்றனரே என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அமைச்சர் தங்கமணி அளித்த பதில் வருமாறு:-

இந்த வழக்கில் ஐகோர்ட்டு யாரையும் தவறாக நினைக்கவில்லை என்று கூறி உள்ளது. இதனால் முதல்-அமைச்சர் பதவி விலக வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் தங்கை கனிமொழி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு நடந்து கொண்டிருக்கும்போது பதவி விலகினாரா?. பா.ம.க. நிறுவனர் ராமதாசின் மகன் அன்புமணி ராமதாஸ் அன்றைய தினம் பதவியில் இருந்தபோது அவர் மீது வழக்கு இருந்தது. அவர் ராஜினாமா செய்தாரா? இது தொடர்பாக அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர்கள் விளக்கம் அளித்து உள்ளனர்.

நெடுஞ்சாலைத்துறை டெண்டர் வழக்கு குறித்து தமிழக முதல்-அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று சொல்வதெல்லாம் அரசியலுக்காக மட்டும்தான். எப்படியாவது அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று முயற்சி செய்தனர். அது முடியாமல் போனதால் இவ்வாறு கூறி வருகின்றனர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒருபோதும் பதவி விலக மாட்டார், அது ஒருபோதும் நடக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் தங்கமணி நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தபடி 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் வருகிற 2021, 2022-ம் ஆண்டுகளில் தான் வரும். ஆண்டுதோறும் மின்தேவை ஆயிரம் மெகாவாட் அதிகரித்து வரும் நிலையில், இடைப்பட்ட 3 ஆண்டுகளில் ஆண்டுக்கு ஆயிரம் மெகாவாட் என 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை வாங்குவதற்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் அனுமதி பெற்று உள்ளோம். மதுபானங்களை மொத்தமாக வாங்குபவர்களின் சிரமங்களை போக்குவதற்காக டாஸ்மாக் கடைகளில் கூடிய விரைவில் ‘ஸ்வைப்பிங்’ எந்திரம் கொண்டு வரப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளலாம், மக்கள் யாருக்கு ஆதரவு அளிக்கிறார்களோ அவர்கள் ஆட்சியில் இருப்பார்கள், என்றார்.

Next Story