வீரபாண்டி பகுதியில் பெட்டிக்கடைகளில் பூட்டை உடைத்து பணம் திருடிய வாலிபர் கைது


வீரபாண்டி பகுதியில் பெட்டிக்கடைகளில் பூட்டை உடைத்து பணம் திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 13 Oct 2018 10:45 PM GMT (Updated: 13 Oct 2018 9:09 PM GMT)

வீரபாண்டி பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் பூட்டை உடைத்து பணம் மற்றும் பொருட்கள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

வீரபாண்டி,

பெட்டிக்கடைகளில் பூட்டை உடைத்து பணம் மற்றும் பொருட்கள் திருடிய சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வீரபாண்டி பகுதிகளில் சாலையோரம் உள்ள பெட்டிக்கடைகளில் பூட்டை உடைத்து பொருட்கள் மற்றும் பணத்தை திருடிச் செல்வதாக வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் புகார்கள் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வீரபாண்டி அருகே நொச்சிபாளையம் பகுதியில் வீரபாண்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு கையில் ஒரு பையுடன் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். மேலும் அவர் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்தபோது அதில் சுத்தியல் மற்றும் அரிவாள் வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில் அவர் அரியலூர் மாவட்டம் தண்ராவத்தம் கீழத்தெருவை சேர்ந்த ஜெயராமனின் மகன் மாயக்கண்ணன் (வயது 28) என்பதும், திருப்பூர் வீரபாண்டி செல்விநகர் பகுதியில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. மேலும் இவர், நொச்சிபாளையம், கணபதிபாளையம், பல்லடம் சாலை, வீரபாண்டி பிரிவு மற்றும் பல்வேறு பகுதிகளில் சாலையோரம் உள்ள பெட்டிக்கடைகளின் பூட்டை உடைத்து பொருட்கள் மற்றும் பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து மாயக்கண்ணன் மீது வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.



Next Story