பல்லாரி, மண்டியா, சிவமொக்கா உள்பட 3 எம்.பி. தொகுதிக்கான தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு


பல்லாரி, மண்டியா, சிவமொக்கா உள்பட 3 எம்.பி. தொகுதிக்கான தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு
x
தினத்தந்தி 13 Oct 2018 9:45 PM GMT (Updated: 13 Oct 2018 9:43 PM GMT)

பல்லாரி, மண்டியா, சிவமொக்கா உள்பட 3 எம்.பி. தொகுதிக்கான தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்த கர்நாடக ஐகோர்ட்டு வழக்கின் விசாரணையை 29-ந் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

பெங்களூரு, 

பல்லாரி, மண்டியா, சிவமொக்கா உள்பட 3 எம்.பி. தொகுதிக்கான தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்த கர்நாடக ஐகோர்ட்டு வழக்கின் விசாரணையை 29-ந் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

பொதுநல மனு தாக்கல்

கர்நாடகத்தில் காலியாக உள்ள பல்லாரி, மண்டியா, சிவமொக்கா ஆகிய 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (நவம்பர்) 3-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு (2019) நாடாளுமன்றத்திற்கு பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதாலும், தற்போது 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தினால் 4 மாதங்கள் மட்டுமே வெற்றி பெறுபவர்கள் எம்.பி.க்களாக இருப்பார்கள் என்பதாலும் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய அவசியமில்லை என்று காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் கூறினார்கள்.

அதே நேரத்தில் 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது தேவையில்லை என்றும், பொதுமக்களின் வரிப்பணம் தான் வீணடிக்கப்படுவதாகவும், அதனால் இடைத்தேர்தல் நடத்துவதை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியும் வக்கீல் சங்க தலைவர் ரங்கநாத், ரமேஷ் நாயக், உத்தரய்யா ஆகிய 3 பேரும் கர்நாடக ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை ஐகோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.

தடை விதிக்க மறுப்பு

இந்த பொதுநல மனு ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தினேஷ் மகேஷ்வரி மற்றும் நீதிபதி பண்டித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல் 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த உடனடியாக இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார். இதற்கு அரசு தரப்பு வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார்.

பின்னர் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பல்லாரி, மண்டியா, சிவமொக்கா ஆகிய 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டார்கள். அதே நேரத்தில் அந்த 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பான விரிவான விவரம் அளிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீசு அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அத்தடன் இந்த மனு மீதான விசாரணையை வருகிற 29-ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Next Story