போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் தனியார் நிறுவன ஊழியர் கைது


போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் தனியார் நிறுவன ஊழியர் கைது
x
தினத்தந்தி 13 Oct 2018 10:10 PM GMT (Updated: 13 Oct 2018 10:10 PM GMT)

கொத்தவால்சாவடியில் ரோந்து சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய தனியார் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார்.

பிராட்வே,

சென்னை கொத்தவால் சாவடி பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 53). இவர் கொத்தவால்சாவடி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். நேற்று மதியம் அதே பகுதியில் உள்ள அண்ணா பிள்ளை தெருவில் மோட்டார் சைக்கிளில் ரோந்து சென்றார்.

அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர், பெருமாளின் மோட்டார் சைக்கிள் மீது மோதுவது போல் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஹெல்மெட்டால் தாக்கினார்

இதில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் தான் வைத்திருந்த ஹெல்மெட்டால் பெருமாளை தாக்கினார். இதுபற்றி பெருமாள் கொத்தவால்சாவடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர், பிராட்வே திருவள்ளுவர் நகரை சேர்ந்த லெனின் இம்மானுவேல் (26) என்பதும், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லெனின் இம்மானுவேலை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story